No products in the cart.
ஜூலை 30 – ஆவிக்குரியவன்!
“ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்” (1 கொரி. 2:15).
வேதம் தேவனுடைய பிள்ளைகளை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. ஒன்று ஆவிக்குரியவர்கள். அடுத்தது, மாம்சத்துக்குரியவர்கள். ஆவிக்குரியவன் ஆவியானவருடைய ஏவுதலினாலும், வழி நடத்துதலினாலும் முன்னேறிச்செல்லுகிறான். ஆனால் மாம்சத்துக்குரியவனோ தன் மனமும் மாம்சமும் விரும்பியதைச் செய்யத் தீவிரிக்கிறான்.
ஆவிக்குரியவனின் குணாதிசயத்தைக்குறித்து வேதம் சொல்லும்போது, அவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானித்துச் செய்வான் என்று சொல்லுகிறது. ஆம், அவன் எல்லாவற்றையும் தீர ஆலோசித்துச் செய்வான். திடீரென்று அவசரப்பட்டு ஏனோதானோ என்று எதையும் செய்யமாட்டான். ஜெபத்தோடு கர்த்தரிடத்தில் விசாரித்து, கர்ததருக்குப் பிரியமானது எது, கர்ததருடைய சித்தம் என்ன, நான் எடுக்கும் தீர்மானங்களைக் கர்த்தர் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுவாரா என்பதையெல்லாம் அவன் சிந்தித்து காரியங்களைச் செய்வான்.
பேதுருவின் வாழ்க்கையைப் பாருங்கள். இளவயது உடையவராய் இருந்தபோது அவர் மாம்சத்துக்குரியவைகளை தன்னுடைய விருப்பப்படி செய்தார். ஆனால் முதிர்வயதானபோதோ ஆவிக்குரிய தன் வாழ்க்கையை ஆவியானவரால் நடத்தப்பட ஒப்புக்கொடுத்தார். இயேசு பேதுருவைப் பார்த்து சொன்னார், “நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைக்கட்டிக்கொண்டு உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” (யோவான் 21:18).
ஆவியானவருடைய வழிநடத்துதலுக்கு உங்களைப் பரிபூரணமாக ஒப்புக்கொடுங்கள். ஒவ்வொரு காரியத்தையும் நிதானித்து அறிய பழகிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் அந்த முடிவு வேதவசனத்தின்படி இருக்கிறதா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு நிமிடமாவது கர்த்தரிடத்தில் அதைக்குறித்து விசாரித்து கர்த்தருக்கு அது பிரியம்தானா என்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் மனசாட்சி என்ன சொல்லுகிறது என்று நிதானித்துப் பாருங்கள். சில முக்கியமான பிரச்சனை நேரங்களில் தேவனுடைய பிள்ளைகளிடமும், பரிசுத்தவான்களிடமும் சென்று அவர்களுடைய ஆலோசனையைக் கேட்டுக்கொள்ளுங்கள். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம் (1 கொரி. 11:31).
தாவீது ராஜாவின் அனுபவத்தைப் பாருங்கள். அவர் தேவ சமுகத்தில் தன்னைத் தாழ்த்தி நிதானித்தார். “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங். 139:23,24) என்று ஜெபித்தார்.
தேவபிள்ளைகளே, உலகம் உங்களைக் காணும்போது மாம்சத்துக்குரியவனாய் அல்லாமல் ஆவிக்குரியவனாய் காணட்டும். அவசரப்பட்டு வீண் விவகாரங்களில் தலையிட்டு, தோல்வியடையாதேயுங்கள். நிதானித்து செயல்பட்டு வெற்றி பெறுகிறவர்களாய் காணப்படுங்கள்.
நினைவிற்கு:- “போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்” (லூக். 20:21).