No products in the cart.
ஜூலை 08 – ஆவியினாலே ஞானம்!
“தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும் …. வேண்டிக் கொள்கிறேன்” (எபே.1:17,19).
எபேசு சபை நல்ல ஆவிக்குரிய, அபிஷேகம் பெற்ற சபைதான். அங்கே அப். பவுல், யோவான், அப்பல்லோ போன்ற தேவனுடைய ஊழியக்காரர்கள் ஊழியம் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த சபைக்கு பவுல் எழுதும்போது, “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” பெற்றுக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டார்.
ஏசாயா தீர்க்கத்தரிசியின் புத்தகத்திலே, பரிசுத்த ஆவியானவர் தருகிற ஆறு விதமான ஆவியின் கிருபைகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தை அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்” (ஏசா. 11:2) என்று எழுதப்பட்டிருக்கிறது.
அறிவு வரம் என்ற ஒன்றும் இருக்கிறது, ஞான வரம் என்ற மற்றொன்றும் இருக்கிறது. அறிவு வரமானது ஒரு மனிதனைப் பற்றியும், இடத்தைப் பற்றியும், சூழ்நிலையைப் பற்றியும் நமக்குள் அறிவைக் கொண்டுவருகிறது. ஆனால் இந்த அறிவைப் பெற்றதோடு நின்றுவிடக்கூடாது. அந்த சூழ்நிலையைக் கர்த்தருக்காக ஆதாயம்பண்ணிக்கொள்ளவேண்டும். ஆசீர்வாதமாக அமைத்துக்கொள்ளவேண்டும். இதற்கு ஞானவரம் அவசியம்! அநேகருக்கு அறிவு இருந்தாலும், ஞானம் இருப்பதில்லை.
ஒரு முறை ஒரு ஊழியக்காரர் ஊழியத்திற்காகப் போனபோது, அந்த இடத்திலே ஒரு ஊழியக்காரி தீர்க்கதரிசனம் உரைத்து அந்த ஊரிலுள்ள பெரும்பகுதி மக்களைத் தன்வசத்தில் வைத்திருந்தார்கள். ஆனால் அவர் அந்த இடத்திற்குப் போனவுடனே கர்த்தர் அவருக்கு அறிவைக் கொடுத்தார். அந்தப் பெண்ணிடமிருந்தது கர்த்தரிடத்திலிருந்து வந்த ஆவி அல்ல என்பதையும், குறி சொல்லும் ஆவி என்பதையும், அநேகரை வழி விலகப் பண்ணுகிற ஆவி என்பதையும் அறிந்துகொண்டார்.
அதை எப்படித் துரத்துவது என்று அவர் கர்த்தரிடத்தில் ஆலோசனைக் கேட்டிருந்திருக்கவேண்டும். ஆனால் அவர் சுயமாக, எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அந்த ஆவியைக் கடிந்துகொண்டபோது, அது அவரைத் தரையிலேதள்ளி அலைக்கழித்தது. நுரைதள்ளச் செய்தது. அந்த ஊர் மக்கள் அவர்மேல் கோபம்கொண்டார்கள்.
கர்த்தர் சொன்னார், ‘மகனே, அதற்குள் குறி சொல்லுகிற ஆவி இருக்கிறது என்பதை நீ அறிந்துகொண்டாய் என்பது உண்மைதான். ஆனால் அதை எப்படி விடுவிக்க வேண்டும் என்கிற ஞானத்தை என்னிடத்தில் நீ கேட்கவில்லையே? ஒரு சில தெரிந்த ஊழியர்களோடு இணைந்து அந்த சகோதரிக்காக ஜெபித்திருப்பாய் என்றால் விடுதலை கிடைத்திருக்கும்’ என்றார்.
அறிவு வரம் கிரியை செய்தால்மாத்திரம் போதாது. ஞானவரமும் நமக்குள் கிரியை செய்யவேண்டும். நாம் ஞானவரத்திற்காக கர்த்தரிடத்தில் ஜெபிக்கவேண்டியது மிகவும் அவசியம். ஞானத்தில் குறைவுள்ளவர்கள் கர்த்தரிடத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையில்கூட, சிறிய காரியமானாலும் சரி, பெரிய காரியமானாலும் சரி, கர்த்தருடைய சித்தத்தின்படி செய்ய நிச்சயமாகவே ஞானம் தேவை. அந்த ஞானத்தை கர்த்தரிடத்தில் கேட்பீர்களாக.
நினைவிற்கு:- “உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்” (1 கொரி. 2:7).