Appam, Appam - Tamil

ஜூலை 01 – பிரியமான ஆராதனை!

“ஆபேலையும், அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார். காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கீகரிக்கவில்லை (ஆதி. 4:4,5).

ஆராதனையின் சிகரத்தை நாம் அடைய முடியாதபடி தடுக்கக்கூடிய பல தடைகளும், மறைக்கக்கூடிய சில காரியங்களும் இருக்கத்தான் செய்கின்றன. காயீனையும், அவனுடைய காணிக்கையையும் ஆண்டவர் அங்கீகரிக்காததுபோலவே பல வேளைகளிலே நம் உள்ளத்தின் நிலைமையைப் பார்த்து நம்முடைய துதி, ஸ்தோத்திரம், காணிக்கையை அவர் அங்கீகரிக்காமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆராதனையை கர்த்தருக்குச் செலுத்தும்போது அவரை நேசித்து, அன்பு செலுத்தி, ஆராதனை செய்ய வேண்டுமேதவிர, ஏதோ கடமைக்காக ஆராதனை செய்யக்கூடாது. அநேக கிறிஸ்தவக் குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்துக்குச் செல்வதை ஒரு கடமையாக எண்ணி, கடமையை முடித்துவிடுவோம் என்று ஆலயத்துக்குச் சென்று திரும்புகிறார்கள். இவர்கள் கர்த்தரின் விருப்பத்தைத் தெரிந்துகொள்ளுவதுமில்லை, அவரைப் பிரியப்படுத்துவதுமில்லை.

இப்படிப்பட்டவர்களைக்குறித்து இயேசு சொன்னார், “மாயக்காரரே, உங்களைக்குறித்து இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்” (மத். 15:7,8,9).

ஆராதனையின் பெரிய தடையாய் விளங்குவது மாய்மாலம். மாய்மாலம் என்றால் என்ன? உதட்டளவில் கர்த்தரண்டை சேர்வதும், உள்ளத்தினளவில் கர்த்தரைவிட்டு தூரமாய் இருப்பதும்தான் மாய்மாலம். சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசம் இருப்பதுதான் மாய்மாலம். மாய்மாலமான பேச்சுகளையும், கடமைக்கான ஆராதனைகளையும், பொழுதுபோக்கிற்காகத் துதிக்கப்படுவதையும் கர்த்தர் ஒருநாளும் விரும்புவதில்லை.

ஏதோ காணிக்கை கொடுக்கவேண்டுமென்ற கட்டாயத்துடன் காணிக்கையை எடுத்துக்கொண்டு காயீன் வந்தானே ஒழிய, அது கர்த்தருக்குப் பிரியம்தானா என்று அறிய அவன் தன்னுடைய மனதைச் செலுத்தவில்லை. காயீனுடைய காணிக்கையிலே இரத்தம் இல்லை. பலியின் இரத்தம் மட்டுமே குற்றமனசாட்சியை கழுவி, தேவனண்டை ஒப்புரவாக்கி, நம்மை அவரண்டை சேர்த்துவிடும்.

ஆனால், ஆபேலைப் பாருங்கள். அவர் தேவனுக்குப் பிரியமான காணிக்கை செலுத்த விரும்பினார். விசுவாசத்தினாலே தன்னுடைய உள்ளத்தை கர்த்தருடைய உள்ளத்தோடு இணைத்து அவருக்குப் பிரியமான காணிக்கை என்ன என்று அறிந்து செயல்பட்டார்.

கல்வாரிச் சிலுவையிலே இயேசுகிறிஸ்து தேவ ஆட்டுக்குட்டியாக பலியாகப்போவதை முன்னுணர்ந்த ஆபேல் தானும் ஒரு ஆட்டுக்குட்டியை பலியாக செலுத்தினார். அந்த காணிக்கை அங்கீகரிக்கப்பட்டது. தேவபிள்ளைகளே, கர்த்தருக்குப் பிரியமானவகையில் அவருக்கு ஆராதனை செய்வீர்களாக.

நினைவிற்கு:- “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை” (ரோமர் 12:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.