No products in the cart.
ஜூன் 01 – கர்த்தருடைய தோள்
“கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்” (ஏசா. 9:6).
நம் அருமை ஆண்டவருடைய பலமிக்க, வல்லமையுள்ள, பெரிய தோளை நோக்கிப்பாருங்கள். “கர்த்தத்துவம் அவர் தோளின்மேல் இருக்கும்” என்று வேதம் சொல்லுகிறது. ஆங்கிலத்தில், “The Government will be upon his shoulders” என்று எழுதப்பட்டிருக்கிறது.
கர்த்தருடைய தோளிலே நாம் அவரது கர்த்தத்துவத்தைக் காண்கிறோம். கர்த்தத்துவம் என்றால் ஆளுகை, அதிகாரம், பொறுப்பு என்பது அர்த்தம். ஆங்கில மொழிபெயர்ப்பில் “அரசாங்கம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உலகத்தில் பல்வேறு வகையான அரசாங்கங்கள் இருந்தாலும், கர்த்தருடைய அரசாங்கமோ வானத்தையும் பூமியையும் அரசாளுகிற மேலான அரசாங்கமாகும். அது பரலோக அரசாங்கம். பூமியின் சகல ஆளுகையின்மேலும் அதிகாரமுடைய அரசாங்கம். அவர் கர்த்தத்துவம் உள்ளவரானபடியினால்தான் அவரை நாம் “கடவுள்” என்று அழைக்காமல் “கர்த்தர்” என்று அழைக்கிறோம்.
சகலமும் கர்த்தருடைய ஆளுகைக்கு கீழ்ப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட வல்லமையுள்ள தேவனுடைய தோளைப் பாருங்கள். அவருடைய தோளிலே முழுப்பரலோகமும் இருக்கிறது. முழு பூமியும் இருக்கிறது. அண்டசராசரங்கள் அனைத்தும் இருக்கின்றன.
இஸ்ரவேலை அரசாள, முதல் ராஜாவாகிய சவுலைக் கர்த்தர் தெரிந்துகொண்டபோது “எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்” (1 சாமு. 10:23) என்று வேதம் சொல்லுகிறது.
ஆனால், கர்த்தர் எப்படிப்பட்டவர்? எல்லா இராஜாக்களும், எல்லா ஜனாதிபதிகளும், எல்லா ஆளுநர்களும் அவருடைய தோளின்கீழாய் இருக்கும்படி அவ்வளவு உயரமும், உன்னதமுமானவர். அவர் பெரியவர். கர்த்தத்துவம் அவருடைய தோளின்மேல் இருக்கிறது.
கர்த்தத்துவம் வகிக்கிற அரசாங்கத்திற்கு பலவகையான பொறுப்புகள் உண்டு. முதலாவது, தன்னுடைய தேச மக்களைப் பாதுகாக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவேண்டும். ஜனங்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்துகொடுக்கவேண்டும்.
மட்டுமல்ல, பகைவர்களின் படையெடுப்பில் இருந்து ஜனங்களைப் பாதுகாக்க வேண்டும். ஜனங்கள் தங்களுடைய தேவையின்போதும், நீதி தேவைப்படும்போதும் பாதுகாப்புக்காக அரசாங்கத்தையே நோக்கிப்பார்ப்பார்கள்.
நாமோ கர்த்தருடைய பலமுள்ள தோளை நோக்கிப்பார்க்கிறோம். அவருடைய தோளின்மேல் நம்முடைய பாரங்களை இறக்கி வைக்கிறோம். அவருடைய தோளின்மேல் சார்ந்துகொள்ளுகிறோம். அவர் நம்மைப் பாதுகாக்கிறார். நமக்கு நீதி செய்கிறார். நம்மை ஆசீர்வதிக்கிறார். எத்தனை சமாதானம்! எத்தனை மகிழ்ச்சி!
உலக அரசாங்கம் ஒருவேளை வறுமையாலோ, பஞ்சத்தாலோ வாடக்கூடும். ஆங்காங்கே காணப்படும் பசுமை சூழ்நிலைகளும் நிரந்தரமானவையாய் இருப்பதில்லை. ஆனால் பரலோக ராஜ்யத்துவம் முற்றிலும் ஆசீர்வாதமானது. தேவபிள்ளைகளே, இயேசுவின் தோளின்மேலிருக்கும் கர்த்தத்துவத்தை நோக்கிப்பாருங்கள். அதை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும். …. அவருடைய கர்த்தத்துவ த்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை” (ஏசா. 9:6,7).