Appam, Appam - Tamil

ஜுன் 29 – மண்ணும் விண்ணும்!

“மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்” (1 கொரி. 15:49).

கர்த்தர் நம்மை தன்னுடைய சொந்தக் கைகளினால் மண்ணிலிருந்து உருவாக்கினார். தம்முடைய சாயலையும் ரூபத்தையும் நமக்குத் தந்து நம்மை ஜீவாத்துமாவாக்கினார். ஆகவே, நாம் எல்லா சிருஷ்டிப்பிலும் விசேஷமானவர்களாய் இருக்கிறோம்.

ஒருநாள் ஆபிரகாமைக் கர்த்தர் தனியே அழைத்து வந்து அவருடைய சந்ததியைக் காட்டினார். என்ன ஆச்சரியம்! மண்ணுக்குரிய மனிதன் விண்ணுக்குரிய நட்சத்திரமாய்ப் பிரகாசிக்கப்போகிறான் என்பதே அந்த காட்சி (ஆதி. 15:1-6).

ஆபிரகாமுடைய உள்ளம் எவ்வளவு மகிழ்ந்திருந்திருக்கும்! தேவன் மனிதனை தம்முடைய சாயலின்படியேயும், ரூபத்தின்படியேயும் சிருஷ்டித்ததின் முக்கிய காரணம் அவனுக்கு பரலோக சாயலைத் தருவதற்காகத்தான்.

முதலாம் ஆதாம் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டான். ஆனால் இரண்டாம் ஆதாமாகிய இயேசுவோ விண்ணிலிருந்து இறங்கிவந்தவர். அநேகம் பிள்ளைகளை மகிமையிலே கூட்டிச்சேர்க்கும்படி யாக்கோபின் ஏணியாய் மாறினார். அந்த ஏணியே கல்வாரிச் சிலுவை.

இயேசு பரலோக காரியங்களைச் சொன்னபோது ஜனங்கள் விசுவாசிக்கவில்லை. அவைகளைப் புரிந்துகொள்ளவுமில்லை. “பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்று கேட்டார் (யோவா. 3:12).

விண்ணுக்குரிய காரியங்களை விவரித்து சொல்லக்கூடியவர் ஒருவர் உண்டென்றால் அவர் இயேசுகிறிஸ்துதான். வேதம் சொல்லுகிறது, “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை” (யோவா. 3:13).

தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு உண்டு. மண்ணுக்குரிய நாம் நித்திய நித்தியமாக விண்ணிலே, பரலோகராஜ்யத்திலே காணப்படுவோம். வேதம் சொல்லுகிறது, “ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்” (தானி. 12:3).

“வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்” (1 கொரி. 15:40,48,49).

தேவபிள்ளைகளே, “நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்” (கொலோ. 3:1).

நினைவிற்கு:- “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” (பிலி. 3:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.