No products in the cart.
ஜுன் 28 – இயேசுவுடனேகூட இருந்தவர்கள்!
“பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு … அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்” (அப். 4:13).
பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை ஜனங்கள் கண்டார்கள். அவர்கள் பேசும்போது வெளிப்படுகிற வல்லமையைக் கண்டார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்ட ஜனங்கள் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று கதறிக்கேட்டார்கள். இவர்கள் படிப்பறிவில்லாதவர்களும், பேதைமைகளுமாயிருந்தாலும் இயேசுவுடனேகூட இருந்தவர்கள் என்று அப்பொழுது ஜனங்கள் அறிந்துகொண்டார்கள்.
நீங்கள் இயேசுவோடுகூட இருப்பதுதான் உங்களுடைய மேன்மை. அதுதான் உங்களை விசேஷமுள்ளவர்களாக்கும். நீங்கள் ஏழைகளாகவும் பேதைகளாகவும் இருக்கலாம். ஆனால் இயேசுவோடு இருப்பீர்களானால் நீங்கள் விசேஷமானவர்களாயிருப்பீர்கள். கர்த்தரோடிருந்த மோசேயினுடைய முகம் பிரகாசித்ததுபோல உங்களுடைய வாழ்க்கையும், ஊழியமும் பிரகாசிக்கும்.
சில வல்லமையான ஊழியர்கள் பிரசங்கிக்கும்போது, அவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். அவர்களைப்போல அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்யமாட்டோமா என்று ஏங்குகிறோம். அவர்களுடைய வல்லமையின் இரகசியம் அவர்களுடைய படிப்பினாலும், பேச்சுத்திறமையினாலும் அமையாமல் அவர்கள் இயேசுவோடுகூட இருப்பதினாலேயே அமைகிறது. நீங்கள் இயேசுவோடு ஜெபத்திலேயும், தியானத்திலேயும், மன்றாட்டிலேயும் அதிக நேரம் செலவிடுவீர்களென்றால் கர்த்தர் உங்களையும் வல்லமையாகப் பயன்படுத்துவார். உங்களையும் அக்கினிஜுவாலையாக மாற்றுவார்.
பூவோடு சேர்ந்த நாரும் மணம்பெறும்; கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். காந்தத்தோடு ஒட்டி உறவாடும் இரும்பு, தானும் காந்த சக்தியை பெற்றுக்கொள்வதில்லையா? சூரியனைப் பார்த்து சுழலும் சந்திரனும் சூரியனுடைய ஒளியினால் இரவு நேரங்களில் பிரகாசிப்பதில்லையா? நீங்கள் இயேசுவோடு செலவழிக்கிற நேரம் அவரிடமிருந்து சத்துவத்தையும், பெலனையும், வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிற நேரமாய் விளங்கும்.
ஒரு வயதான மூதாட்டியை நான் அறிவேன். அவர்கள் எப்பொழுதும் ஜெபித்துக்கொண்டிருக்கிறபடியினால் கர்த்தர் அவர்களுக்கு அருமையான தீர்க்கதரிசன வரத்தைக் கொடுத்திருந்தார். அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாயிருந்தாலும், பெரிய பெரிய அதிகாரிகளையும், வக்கீல்களையும், வியாபாரிகளையும் கர்த்தருக்குள் வழிநடத்திவிட்டார்கள். அவர்கள் எப்போதும் ஒரு தூணின் அருகே பாய்போட்டு அமர்ந்து ஜெபித்துக்கொண்டேயிருப்பார்கள்.
அந்த தூணைக் கர்த்தருடைய பாதமாக எண்ணிக்கொண்டு ஜெபிப்பார்கள். பல வேளைகளில் ஜெபிக்கமுடியாத பெலவீனங்கள் ‹ழ்ந்துகொண்டாலும், கர்த்தருடைய பாதத்தின் அருகே அமைதியாய் அமர்ந்து அவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். கர்த்தரும் தம்முடைய இனிய பிரசன்னத்தால் அவர்களை மகிழ்ச்சியாக்குவார்.
தேவபிள்ளைகளே, இவ்வுலகத்தில் நித்தமும் கர்த்தரோடு இருப்பவர்கள், கடைசி எக்காளம் தொனிக்கும்போது மேகங்கள்மேல் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு நிச்சயமாகவே எப்பொழுதும் கர்த்தரோடுகூட இருப்பார்கள்.
நினைவிற்கு:- “அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்” (வெளி. 17:14).