No products in the cart.
ஜுன் 27 – ஏதாகிலும்!
“நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும்” (மாற். 9:22).
ஒரு தகப்பன் தன் மகனுக்குப் பிடித்திருந்த அசுத்த ஆவியிலிருந்து விடுதலைபெறும்படி அவனை சீஷர்களிடத்திலே அழைத்துவந்தான். அந்த அசுத்த ஆவி அந்த சிறுவனைத் தொடர்ந்து அலைக்கழித்துக்கொண்டேயிருந்தது. சீஷர்களால் அதைத் துரத்தக்கூடாமல் போயிற்று.
இயேசுகிறிஸ்துவினிடத்தில் அந்த தகப்பன், “நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால் ….” என்று அன்போடு சொல்லுகிறதைப் பார்க்கிறோம். இவனை மனிதர்களிடத்திலும் கொண்டுபோக முடியாது. வைத்தியர்களிடத்திலும் கொண்டுபோக முடியாது. எந்த வைத்தியனால் மருந்துகளையும், மாத்திரைகளையும் கொடுத்து பிசாசைத் துரத்த முடியும்? இயேசுவிடம் வல்லமையுண்டு என்பதை விசுவாசித்து அந்த தகப்பன் நம்பிக்கையோடு கேட்டான்.
நம் தேவன் சர்வவல்லமையுள்ளவர் (ஆதி. 17:1). அவர் சகலவற்றையும் செய்ய வல்லவர் (யோபு 42:2). வல்லமை தேவனுடையது (சங். 62:11). அவரால் செய்யக்கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுமில்லை” (எரே. 32:27).
நீங்கள் கர்த்தர்மேல் விசுவாசம் வையுங்கள். உங்கள் பிரச்சனைகளையும், போராட்டங்களையும் உங்கள் ஜெபத்தில் கொண்டுவாருங்கள். கர்த்தர் நிச்சயமாகவே உங்களுடைய ஜெபத்தைத் தள்ளாதவர். உங்கள் வேண்டுதல்களை புறக்கணிக்காதவர். அவரிடத்தில் திரளான கிருபையும், இரக்கங்களும் உண்டு. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல அவர் நிச்சயமாகவே உங்களுக்கு இரங்குவார்.
வேதம் சொல்லுகிறது, அவர் உங்களை அதிசயங்களைக் காணப்பண்ணுவார் (மீகா 7:15). அவர் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ளவர் (லூக். 24:19). அவரே உங்களுக்காக யாவற்றையும் செய்து முடிக்கிறவர் (சங். 138:8).
‘நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால் எங்கள்மேல் மனதிரங்கி எங்களுக்கு உதவி செய்யும். இதுவரை மனிதருடைய உதவியை நாடினோம். இப்பொழுது உம்மை உறுதியாய்ப் பற்றிப்பிடித்துக்கொண்டோம்’ என்று அந்த தகப்பன் இயேசு கிறிஸ்துவை நோக்கிக் கூப்பிட ஆரம்பித்தான். அப்பொழுது இயேசுகிறிஸ்து அந்த அசுத்த ஆவியைக் கடிந்துகொண்டார்.
‘ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ’ என்று இயேசு அதட்டினார். அப்பொழுது அது சத்தமிட்டு அவனை மிகவும் அலைக்கழித்துவிட்டுப் புறப்பட்டுப் போயிற்று. இயேசு அவன் கையைப் பிடித்து அவனைத் தூக்கினார். உடனே அவன் எழுந்திருந்தான் (மாற். 9:25,27).
தேவபிள்ளைகளே, உங்களுடைய பிரச்சனைகள் எவை? இன்றைக்கு உங்களுக்கு முன்பாக நிற்கிற பிசாசின் எதிர்ப்புகள் எவை? கர்த்தரிடத்தில் வாருங்கள். ‘எங்கள்மேல் மனதிரங்கி எங்களுக்கு உதவி செய்யும்’ என்று வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயமாகவே கர்த்தர் அற்புதத்தைச் செய்வார்.
தாவீது சொன்னார், “இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும்; மனுஷனுடைய உதவி விருதா” (சங். 108:12). மனிதன் உதவி செய்வேன் என்று சொல்லி செய்யாமல் இருந்துவிடுவான். ஆனால், கர்த்தரோ உங்களுடைய ஜெபத்தைக் கேட்டு உங்கள் வாழ்க்கையிலே நிச்சயமாகவே ஒரு அற்புதத்தைச் செய்வார்.
நினைவிற்கு:- “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (சங். 46:1).