No products in the cart.
ஜுன் 25 – உப்பாயிருக்கிறீர்கள்!
“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” (மத். 5:13).
‘நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். மலையின்மேலிருக்கிற பட்டணமாயிருக்கிறீர்கள். விளக்குத் தண்டின்மேலிருக்கிற விளக்காயிருக்கிறீர்கள்’ என்று இயேசு சொன்னார். சாரமுள்ள உப்பு உண்டு. சாரமில்லாத உப்பும் உண்டு. உப்பானது சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமேயொழிய வேறொன்றுக்கும் அது உதவாது.
நாம் உண்ணும் உணவிலே இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் அளவுக்கு உப்பு சேர்க்கப்படுகிறது. ஆனால் அது உணவில் எவ்வளவு சுவை ஊட்டுகிறது! கிறிஸ்தவர்கள் இந்திய தேசத்திலே ஏறக்குறைய மூன்று சதவிகிதம்தான் இருக்கிறார்கள். நாம் தேசத்துக்கே சுவையூட்டும்படி உப்பாக அழைக்கப்பட்டிருக்கிறோம்.
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். “உப்பில்லா பண்டம் குப்பையிலே, உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பவை நமது பண்டைய பழமொழிகள். உப்புக்கு காலாகாலமாக பெரிய மதிப்பை ஜனங்கள் கொடுத்துவந்திருக்கிறார்கள்.
ஒரு கடையை ஆரம்பிக்கும்போது முதலாவதாக உப்பை வாங்கவேண்டும் என்பது சம்பிரதாயம். புது வீடு கட்டி புதுமனை புகும்போது முதலாவது உப்பை உள்ளே கொண்டுபோவார்கள். பழங்காலத்தில் பணத்திற்குப்பதிலாக உப்பையே பண்டமாற்றுப் பொருளாக பயன்படுத்தினார்கள்.
உப்பினுடைய முதல் குணாதிசயம் சுவையூட்டுவதாகும். உப்பானது தண்ணீரில் கரைந்து, உணவுப் பொருட்களோடு இணைந்து சுவை ஊட்டுகிறது. வேதம் சொல்லுகிறது, “நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக” (லேவி. 2:13). “உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” (கொலோ. 4:6).
நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு சுவையூட்ட இயேசு தம்மைத்தாமே உப்பாக மாற்றினார். கல்வாரியிலே ஊற்றப்பட்டு, பாவ மன்னிப்பு என்ற சுவையைத் தந்தார். இரட்சிப்பின் சந்தோஷம் என்கிற மகிழ்ச்சியைத் தந்தார். பரிசுத்தஆவியின் நிறைவு என்கிற கிருபையைத் தந்தார். அவரே நமக்காக பானபலியாக ஊற்றுண்டார். பாவநிவாரணபலியாக ஒப்புக்கொடுத்தார்.
ஒருமுறை ஜான் வெஸ்லி அவர்கள் ஒரு பஞ்சாலையைப் பார்வையிடும்படி வந்தார். அதிலே வேலை செய்தவர்கள் துன்மார்க்கர்களாக இருந்தார்கள். ஜான் வெஸ்லி வருவதைப் பார்த்த ஒரு பெண் அவரை மிகவும் பரிகாசம்பண்ணினாள். அவருடைய உள்ளம் உடைக்கப்பட்டது. ஜெபத்தோடு அருகிலே வந்தார்.
மறுநிமிடம் தேவ ஆவியானவர் அவள்மேல் பலமாய் இறங்கினபோது, பாவ உணர்வடைந்து அவள் தேம்பித் தேம்பி அழத்துவங்கினாள். அந்த ஆலையில் வேலை செய்த அவ்வளவு பேரும் அவளோடு சேர்ந்து அழ ஆரம்பித்தார்கள். அன்றைக்கு அந்த ஆலையிலே ஒரு எழுப்புதல் வந்தது. அந்த ஆலையின் பொறுப்பாளர், ‘ஐயா, உண்மை ஊழியராய் நீங்கள் வந்தீர்கள். எங்கள் தொழிற்சாலைக்கு சுவையூட்டிவிட்டீர்கள்’ என்றார்.
தேவபிள்ளைகளே, “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத். 5:16).
நினைவிற்கு:- “நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு” (1 தீமோ. 4:12).