Appam, Appam - Tamil

ஜுன் 21 – பூரிப்பாய் மகிழுகிறேன்!

“கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது (ஏசா. 61:10).

உலகப்பிரகாரமான மகிழ்ச்சியுமுண்டு, ஆவிக்குரிய மகிழ்ச்சியுமுண்டு. நீங்கள் பூமியிலும் பரலோகத்திலும் சந்தோஷமாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறவர்கள். கர்த்தர் உங்களுடைய குடும்பத்திலேயும், சபையிலேயும் மகிழ்ச்சியைக் கட்டளையிட விரும்புகிறார்.

பூமிக்குரிய வாழ்க்கையிலே ஒரு குடும்பம் சந்தோஷமாயிருப்பது பெரிய கிருபையாகும். கணவன், மனைவி, பிள்ளைகள் என அனைவரும் எப்போதும் மகிழ்ந்திருந்தால் அந்த இல்லற வாழ்க்கைக்கு ஒப்பானது ஏதுமில்லை. குடும்பமாக பிரச்சனைகளை எதிர்நோக்குங்கள். குடும்பமாக ஜெபியுங்கள். குடும்பமாக மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சில கணவர்கள் மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு தனியே உணவகங்களில் விருப்பம்போல் சாப்பிட்டுக்கொண்டு நண்பர்களோடு உல்லாசமாய் மகிழ்ந்து திரிவார்கள். இப்படிப்பட்ட குடும்பங்களில் அமைதி நிலவ வாய்ப்பில்லை.

உலகத்திற்குரிய அநித்தியமான பாவ சந்தோஷங்களைத் தேடாமல் கர்த்தர் தருகிற ஆவிக்குரிய சந்தோஷத்தை அனுபவிக்கும்போது, அது நித்தியமாய் இருக்கிற உண்மையான சந்தோஷமாயிருக்கும். உலக பாவ சந்தோஷங்கள் முடிவிலே வேதனையைத்தான் கொண்டுவரும். ஆனால் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுக்குப் பெலனைக் கொண்டுவரும் (நெகே. 8:10).

தெய்வீக சந்தோஷத்தை கிறிஸ்து வாக்குப்பண்ணி, “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவா. 15:11) என்றார்.

ஒரு தேவனுடைய பிள்ளைக்கு உண்மையான மகிழ்ச்சி எப்போது உண்டாகும் தெரியுமா? பாவம் மன்னிக்கப்படும்போதுதான் ஒரு பெரிய இரட்சிப்பின் சந்தோஷம் அவனுடைய உள்ளத்தில் வருகிறது. கர்த்தர் என்னை தம்முடைய பிள்ளையாக ஏற்றுக்கொண்டார், என் பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது, நான் இராஜாதி இராஜாவின் பிள்ளை, நான் கர்த்தாதி கர்த்தாவின் பிள்ளை என்கிற மகிழ்ச்சி வருகிறது.

வேதம் சொல்லுகிறது, “கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது. ….. அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்” (ஏசா. 61:10).

மகிழ்ச்சியிலேயே இது பூரிப்பாய் மகிழுகிற ஒரு மகிழ்ச்சி. இயேசுவின் தாயாராகிய மரியாள் “என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது” என்று சொல்லி மகிழ்ந்தார் (லூக். 1:47). இயேசு கிறிஸ்துவுக்கும்கூட அப்படி களிகூர்ந்து மகிழுகிற அனுபவம் இருந்தது. ‘இயேசு ஆவியிலே களிகூர்ந்தார்’ (லூக். 10:21) என்று வேதத்திலே வாசிக்கிறோம்.

தேவபிள்ளைகளே, ஆவியின் களிகூருதலில் உள்ள மகிழ்ச்சி ஈடு இணையற்றதாகும். பரிசுத்த ஆவியானவரால் வருகிற சந்தோஷம் பரலோகத்திலிருந்து வருகிற சந்தோஷமாகும்.

நினைவிற்கு:- “…. சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்” (1 பேது. 1:8,9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.