Appam, Appam - Tamil

ஜுன் 14 – கீழ்ப்படிந்து நடப்போம்!

“கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் (யாத். 24:7).

“கீழ்ப்படிந்து நடப்போம்” என்பதே இஸ்ரவேலரின் தீர்மானமாயிருந்தது. மோசே உடன்படிக்கையின் புத்தகத்தை எடுத்து, ஜனங்களின் காதுகேட்க வாசித்தபோது, கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து கீழ்ப்படிந்து நடப்போம் என்று ஜனங்கள் எல்லோரும் ஒருமனமாய் தீர்மானம் செய்தார்கள். நீங்கள் கர்த்தருடைய வார்த்தைக்கும், ஆலோசனைகளுக்கும் கீழ்ப்படியும்போது கர்த்தர் உங்களை மேன்மையாய் உயர்த்துவார். வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்” (உபா. 28:14).

பரலோகத்திலுள்ள அத்தனை தேவதூதர்களும், கேருபீன்களும், சேராபீன்களும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறார்கள். அதை எதிர்த்து அவர்கள் கேள்வி கேட்பதோ, வியாக்கியானம் செய்வதோ இல்லை. நூற்றுக்கு நூறு கீழ்ப்படிவதினால் நூற்றுக்கு நூறு தேவசித்தத்தின்படி நடக்கிறார்கள். உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலும் செய்யப்படுவதாக என்று நாம் ஜெபிக்கிறதுபோலவே தேவனுக்கு நாம் கீழ்ப்படியவும் வேண்டும்.

பூமியைப் பாருங்கள். இயற்கை அவருக்குக் கீழ்ப்படிகிறது. மட்டுமல்ல, அசுத்த ஆவிகளும் அவருக்குக் கீழ்ப்படிகிறது. நீ பேசாமல் அவனை விட்டுப் போ என்று கர்த்தர் பிசாசை அதட்டிய போது, கப்பர்நகூம் ஜெப ஆலயத்தில் பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்த மனிதன் விடுதலையடைந்தான் (மாற். 1:25,26).

சர்வ சிருஷ்டிகளும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்திருந்தாலும் மனிதனோ, கர்த்தருக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லை. விலக்கப்பட்ட கனியை புசிக்கக்கூடாது என்று கர்த்தர் கட்டளையிட்டிருந்தும் ஏவாளும், ஆதாமும் அதைப் புசித்து பாவம் செய்தார்கள். நினிவேக்கு போகும்படி கர்த்தர் யோனாவிடம் சொன்னபோது யோனா கீழ்ப்படியாமல் தர்ஷீசுக்குப் போகும் கப்பலில் ஏறினார்.

கீழ்ப்படியாமையினால்தான் பாவமும் சாபமும் வருகின்றன. நோய்களும், வியாதிகளும், மரணங்களும் நேரிடுகின்றன. தேவனுடைய பிள்ளைகள் எல்லாவற்றிலும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டியது மிகமிக அவசியம். கர்த்தருக்குக் கீழ்ப்படிய நினைக்கிறவர்கள் வேதவசனத்துக்கும் கீழ்ப்படியவேண்டும். அப்பொழுதுதான் ஆசீர்வாதங்களையும், கிருபைகளையும் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

பரிசுத்தஆவியானவரைக்குறித்து, “தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்தஆவி” (அப். 5:32) என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பவுல் அப்போஸ்தலன் கர்த்தர் தந்த பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவராக இருக்கவில்லை (அப். 26:19).

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொடுக்கவே இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார். அவர் நாசரேத்து ஊரிலே தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வளர்ந்தார் (லூக். 2:51). மட்டுமல்ல, பிதாவாகிய தேவனுக்கு முற்றுமுடிய கீழ்ப்படிந்தார். வேதம் சொல்லுகிறது, “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி. 2:8). தேவபிள்ளைகளே, கீழ்ப்படியும்போது மேல்படிக்கு உயர்த்தப்படுவீர்கள். உன்னதங்களின் சகல ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக்கொள்வீர்கள்.

நினைவிற்கு:- “அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி… நாமம் தரிக்கப்பட்டார்” (எபி. 5:8-10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.