Appam, Appam - Tamil

ஜுன் 11 – அறிவின் வாசனை!

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (2 கொரி. 2:14).

கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையானது, ஒரு ஆச்சரியமான வாசனையாகும். அது அபூர்வமானதும், மேன்மையானதுமான ஒன்றாகும். கர்த்தர் நம்மைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிறார். அதைக்குறித்து சந்தோஷப்பட்டு அப். பவுல், ‘எங்களைக்கொண்டு அவரை அறிகிற அந்த அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்’ என்று சொல்லி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறார்.

தமஸ்கு வீதியிலே கர்த்தர், அப். பவுலை சந்தித்தபோது, முதலாவது அவருடைய இருதயத்தில் எழுந்ததெல்லாம் ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்கிற மகா ஆழமான கேள்விதான் (அப். 9:5). அவர் யார் என்று அறிந்துகொள்ளுவதற்கு நம்முடைய முழு ஆயுளும் போதாது. ஆனாலும், அவரை அறியவேண்டுமென்று அப். பவுல் தீர்மானித்ததினால் கர்த்தர் முதலாவது அவருக்கு தன்னை வெளிப்படுத்தும்போது, “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்று சொன்னார் (அப். 9:5). தேவன் மகா அன்புள்ளவர். இரக்கமுள்ளவர். ஒளியானவர், வழியானவர், வாசலானவர். சத்தியமானவர், ஜீவனுமானவர். அதே நேரத்தில், சவுல் என்ற பவுலால் துன்பப்படுத்தப்பட்டவருமாகவும் இருந்தார்.

அப். பவுல், அந்த வெளிப்பாடோடு நின்றுவிடாமல் மேலும் தேவனை அறிய விரும்பினார். “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும்…. எண்ணுகிறேன்” (பிலி. 3:8,10,11) என்று அவர் குறிப்பிடுகிறார்.

நீங்கள் கர்த்தரை எந்த அளவுக்கு அறிந்துகொள்ளவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அந்த அளவுக்கு கர்த்தருக்கு உகந்த வாசனை வீசுவீர்கள். அப். பேதுரு அதைக்குறித்து எழுதும்போது, “நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினது” (2 பேது. 1:3) என்று குறிப்பிட்டார்.

கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே நமக்கு வருகிற ஆசீர்வாதங்கள் எண்ணற்றவை. அதிலே ஜீவனுக்கும், தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் நாம் பெற்றுக்கொள்ளுகிறோம். அவருடைய திவ்விய வல்லமையைப் பெற்றுக்கொள்ளுகிறோம். நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளுகிறோம். வேதம் சொல்லுகிறது, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது” (2 பேது. 1:8).

“கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்” (2 பேது. 2:20) என்று வேதம் சொல்லுகிறது.

தேவபிள்ளைகளே, கர்த்தரை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ள முற்படுவீர்களா? இன்னும் உம்மை அறியணுமே, இன்னும் கிட்டிச் சேரணுமே என்ற ஏக்கத்தோடு வாசனை வீசுவீர்களா?

நினைவிற்கு:- “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்” (2 பேது. 3:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.