ஜுன் 10 – அன்பின் வாசனை!
“கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்” (எபே. 5:2).
தெய்வீக அன்பு கர்த்தருக்கு முன்பாக ஒரு சுகந்த வாசனையாயிருக்கிறது. நாம் கர்த்தரில் அன்புகூரும்போதும், காண்கிற சகோதரர்கள்மேல் அன்புகூரும்போதும் தேவனுடைய இருதயம் மகிழ்கிறது. அந்த அன்பின் வாசனையிலே அவர் களிகூருகிறார்.
பிலிப்பி என்ற பட்டணத்தில் உள்ள சபையினர், அப். பவுலின் ஊழியத்துக்கென்று காணிக்கைகளை சேகரித்து அனுப்பியபோது, அக்காரியம் அப். பவுலை மகிழ்வித்தது. அவர் சொல்லுகிறார், “உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்” (பிலி. 4:18).
நாம் ஆண்டவருக்கென்று காணிக்கை கொடுக்கும்போது இயேசு எப்படி நம்மில் மனப்பூர்வமாய் அன்புகூர்ந்து தன்னையே காணிக்கையாய் கொடுத்தாரோ, அதுபோலவே நாமும் தெய்வீக அன்பினால் நிரம்பி மனமுவந்து கொடுக்கவேண்டும். ஏதோ கடமைக்காக என்றல்லாமலும், காணிக்கை எடுக்கிறார்களே ஏதாகிலும் போடவேண்டும் என்பதற்காகவும் காணிக்கை கொடுக்கக்கூடாது. நீங்கள் காணிக்கை கொடுப்பது கர்த்தரை கனப்படுத்துவதாக என்பதால் உங்களது காணிக்கையானது உங்களுடைய முழு அன்பிலிருந்து வெளிவந்ததாக இருக்கவேண்டும். அதுவே சுகந்த வாசனை வீசக்கூடியதாயிருக்கும்.
ஒரு காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜனாதிபதியாய் இருந்த ஜான் கென்னடி வாலிபனாய் இருந்தபோது வாசனை தைலம் தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்தார். தனது வருமானம் முழுவதையும் ஒரு மிஷனெரி ஸ்தாபனத்திற்கு கொடுத்து அதைத் தாங்கினார். அவர் தினமும் வேலைகளை முடித்துவிட்டு வெளியே வரும்போது தெருவெல்லாம் வாசனை வீசக்கூடிய அளவிற்கு அவருடைய வஸ்திரங்கள் அந்த வாசனைத்தைலத்தின் நறுமணத்தினால் நிரம்பியிருந்தன.
என்னுடைய தாத்தா ஒரு பள்ளியிலே தலைமை ஆசிரியராய் பணியாற்றினார். ஒவ்வொரு மாதம் சம்பளம் வாங்கும்போதும் கர்த்தர் கொடுத்த ஜீவன், சுகம், பெலனுக்காக நன்றி செலுத்திவிட்டே வாங்குவார். பிறகு அந்த சம்பளத்தில் பத்தில் ஒரு பகுதியை எடுத்து வைத்துக்கொண்டு தேவனுடைய ஊழியக்காரரை காணச்செல்வார்.
ஊழியத்துக்கு கொடுத்த பின்புதான் குடும்பச் செலவுக்கு தன் ஊதியத்தைப் பயன்படுத்துவார். இதனால் அவருடைய குடும்பம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டது. குடும்பத்தில் மன நிறைவும், திருப்தியும், சந்தோஷமும், சமாதானமும் எப்பொழுதும் நிலவியது. கர்த்தர் அந்த காணிக்கையை சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு அவர்கள் குடும்பத்தை ஆசீர்வதித்தார்.
தேவபிள்ளைகளே, கர்த்தருக்குக் கொடுத்து குறைந்துபோனவர்கள் ஒருவருமில்லை. மனப்பூர்வமாய் நீங்கள் கர்த்தருக்குக் கொடுப்பதை சுகந்த வாசனையாய் அவர் ஏற்றுக்கொள்ளுகிறார். நிச்சயமாகவே வானத்தின் பலகணிகளைத் திறந்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
நினைவிற்கு:- “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரி. 9:7).