No products in the cart.
ஜுன் 01 – சுகந்த வாசனை!
“சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை” (ஆதி. 8:21) என்றார்.
ஜலப்பிரளயத்து அழிவின் முடிவிலே ஜலம் வற்றி, நோவா பேழையைவிட்டு வெளியே வந்தபோது, அவர் செய்த முதல் காரியம் கர்த்தருக்கென்று பலிபீடத்தைக் கட்டி பலி செலுத்தி ஆண்டவரை ஆராதித்ததுதான். கர்த்தர் அந்த சுகந்த வாசனையை முகர்ந்தார். அது உலகத்தார்மேலிருந்த கோபத்தைத் தணித்து, அவரை சாந்தப்படுத்தியது.
மட்டுமல்ல, அதன் மூலமாக அவர் மனுக்குலத்தோடு உடன்படிக்கைபண்ணி தம்முடைய வானவில்லை மேகத்தின்மேல் வைத்தார். அது கர்த்தருக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கிறது. அந்த வில் மேகத்தில் தோன்றும்போதெல்லாம் இனி ஜலத்தினால் உலகத்தை அழிக்காதபடி என் உடன்படிக்கையை நினைவுகூருவேன் (ஆதி. 9:13-16) என்று கர்த்தர் சொன்னார்.
நாம் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களாகிவிட்டதுடன் தேவனுக்கு சத்துருக்களாகிவிட்டோம். வேதம் சொல்லுகிறது, “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோம. 5:10).
நோவாவின் நாட்களிலே வந்த கேடுகள் நம்முடைய நாட்களிலேயும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இயேசுவானவர் தம்மையே கல்வாரிச்சிலுவையிலே பலியாக ஒப்புக்கொடுத்தார். நோவாவின் பலியை சுகந்த வாசனையாக முகர்ந்ததுபோல, கிறிஸ்துவினுடைய பலியையும் ஏற்றுக்கொண்டு நமக்கு பாவ மன்னிப்பையும், இரட்சிப்பையும் கட்டளையிடக் கர்த்தர் சித்தமானார்.
பாவம் செய்த மனுஷன் கர்த்தருக்கு சுகந்த வாசனையாக மாறவேண்டுமானால், கல்வாரி இரட்சகரை நோக்கிப் பார்த்தேயாகவேண்டும். மட்டுமல்ல, இயேசுகிறிஸ்து எப்படி தன்னை தேவனுக்கென்று ஒப்புக்கொடுத்தாரோ அதுபோல நாமும் நம்மை சர்வாங்க தகனபலியாக அர்ப்பணித்துவிடவேண்டும். அப். பவுல், “சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று …. வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோம. 12:1) என்று எழுதினார்.
பரலோகதேசத்திலுள்ள ஆயிரக்கணக்கான வாசனைகள் தேவனுக்குப் பிரியமானதாய் இருந்தாலும் பூமியிலுள்ள பலியின் வாசனையை அவர் சுகந்த வாசனையாய் ஏற்றுக்கொள்ளுகிறார். எந்த ஒரு மனுஷன் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, அவருக்காக தன்னுடைய வாழ்க்கையை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறானோ, அவன் கர்த்தருடைய பார்வைக்குப் பிரியமானவனாயிருக்கிறான். அவன் செலுத்துகிற பலியின் வாசனையை கர்த்தர் சுகந்த வாசனையாய் ஏற்றுக்கொள்ளுகிறார்.
எண்ணாகமம் 28-ம் அதிகாரத்திலும், யாத்திராகமம் 27-ம் அதிகாரத்திலும் பழைய ஏற்பாட்டுக்கால பலிகளைப்பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டுக்காலத்திலுள்ள நாம், ‘இனி நான் அல்ல, கிறிஸ்துவே’ என்று பூரணமான தீர்மானத்தோடு நம்மை அர்ப்பணிக்க வேண்டும். தேவபிள்ளைகளே, இதுவே கர்த்தருக்கு சுகந்த வாசனையாயிருக்கும்.
நினைவிற்கு:- “ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்க தகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும்” (யாத். 29:18).