Appam, Appam - Tamil

ஜனவரி 21 – புதிய கிருபை!

“நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே. அவைகள் காலைதோறும் புதியவைகள்” (புல. 3:22,23).

இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு மட்டுமல்ல, கர்த்தருடைய கிருபையிலே பெருகுகிற ஒரு ஆண்டாக, அவருடைய கிருபையை அனுதினமும் ருசிக்கிற ஒரு ஆண்டாக, அவருடைய கிருபையிலே ஸ்திரப்பட்டு, உறுதிப்படும் ஒரு ஆண்டாக இருப்பதாக.

நீங்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழும்பி, தேவனுடைய கிருபைக்காக முழங்காலில் நின்று “கிருபை தாரும், கிருபை தாரும்” என்று மன்றாடி ஜெபியுங்கள். பிறகு கர்த்தர் சிறு வயதிலிருந்து உங்களுக்குப் பாராட்டின அளவற்ற கிருபைகளுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்.

முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு, அதிகாலை எழுந்துகொள்ளுகிற பழக்கம் இருந்தது (ஆதி. 21:1; ஆதி. 22:3). தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமிடம் தன் மகனாகிய ஈசாக்கை பலி செலுத்தச் சொன்னபோது, அது அவருடைய உள்ளத்தை மிகுந்த வேதனைக்குள்ளாக்கினபோதிலும், கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்ற அதிகாலமே எழுந்துகொண்டார்.

வேதம் சொல்லுகிறது, “ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டு பேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்” (ஆதி. 22:3).

இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் பெரிய கிருபை பாராட்டி, ஒவ்வொரு நாள் காலை வேளையிலும் அவர்களுக்கு மன்னா பொழியும்படிச் செய்தார். வனாந்தரத்திலே அவர்கள் விதைக்கவில்லை, தண்ணீர் பாய்ச்சவில்லை, வயல் நிலங்களிலே நாற்று நடவுமில்லை. ஆனால் கிருபையாக இருபது லட்சம் இஸ்ரவேலருக்கும் காலைதோறும் மன்னாவைக் கர்த்தர் பொழிந்தருளினார்.

நாற்பது வருடங்கள் தொடர்ந்து மன்னா பொழிந்தது. அதிகாலையில் விளங்கின தேவ கிருபையை மோசே மறந்துவிடவில்லை. “நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்” (சங். 90:14) என்று ஜெபித்தார். அந்த கிருபையை மோசேக்கு கொடுப்பதற்காக, “விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்” (யாத். 34:2) என்று கர்த்தர் சொன்னார்.

நீங்கள் கிருபையிலே பெருக வேண்டுமானால், அதிகாலை வேளையிலே தேவனுடைய கிருபையை ருசிக்கும்படி அவருடைய பாதத்தண்டை வர வேண்டியது மிக மிக அவசியம். வேதம் வாசித்து, கர்த்தருடைய அன்பையும், கிருபையையும் தியானிக்கும்போது, உங்கள் வாழ்க்கையை தேவ பெலனும், சத்துவமும், வல்லமையும் நிரப்பும்.

தேவபிள்ளைகளே, ஏதேன் தோட்டத்திலே பகலின் குளிர்ச்சியான வேளையிலே உலாவின ஆண்டவர், இந்தப் புதிய ஆண்டிலே, காலைதோறும் உங்களுக்குப் புதிய கிருபைகளைக் கொடுத்து, அவருடைய அளவற்ற அன்பை ருசிக்கும்படிச் செய்தருளுவார். உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது” (சங்.63:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.