Appam, Appam - Tamil

ஜனவரி 17 – இழந்துபோன ஜீவன்

“லாசருவே, வெளியே வா என்று உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்” (யோவா. 11:43).

தங்கள் சகோதரனாகிய லாசரு சுகவீனமானபோது துடித்துப்போன மார்த்தாளும் மரியாளும் இயேசுவுக்கு ஒரு நபர் மூலமாக சொல்லியனுப்பினார்கள். “ஆண்டவரே நீர் சிநேகிக்கிறவன் வியாதியாய் இருக்கிறான்” என்று அவசரச் செய்தி அனுப்பினார்கள். சுகவீனமாக இருந்த லாசருவின் நிலை மேலும்மேலும் மோசமாகி, இறுதியில் வியாதியின் அகோரத்தினால் அவர் மரணம் அடைந்தார்.

இயேசு மீண்டும் பெத்தானியாவுக்கு வந்தபோது லாசரு மரித்து நான்கு நாளாகியிருந்தது. மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து, “ஆண்டவரே நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்” என்றாள் துக்கத்தோடு!

இயேசு என்ன சொன்னார் தெரியுமா? “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார் (யோவா. 11:25,26).

கேட்டதோடு நிற்காமல், “லாசருவே வெளியே வா!” என்று சொல்லி லாசருவை உயிரோடு எழுப்பினார். நம் ஆண்டவர் மரணத்தின்மேல் அதிகாரமுள்ளவர். மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவர் (வெளி. 1:18). மரணத்தின் அதிபதியை தன்னுடைய மரணத்தினாலே ஜெயித்தவர் (எபி. 2:14). “மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே” என்று வெற்றி முழக்கமிட்டவர் (1 கொரி. 15:55).

மரித்த லாசரு, யவீருவின் மரித்த மகள், நாயினூர் விதவையின் மரித்த மகன், ஆகியோரை நம் அருமை ஆண்டவர் இயேசு உயிரோடு எழுப்பிக்கொடுத்தார். மட்டுமல்ல, நமக்கு நித்திய ஜீவனை, பரிபூரண ஜீவனை கிருபையாய் வாக்களித்திருக்கிறார்.

ஆகவே மரணத்திற்கு அப்பால் நமக்கு ஒரு பெரிய நம்பிக்கை உண்டு. நாம் பரலோக இராஜ்யத்திலே, அந்த ஒளி மயமான தேசத்திலே, கிறிஸ்துவோடு என்றென்றைக்கும் ஜீவித்திருப்போம் என்ற நம்பிக்கையே அது.

“என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவா. 14:2,3) என்று நம் அருமை இரட்சகர் வாக்களித்திருக்கிறாரே.

லாசரு தான் இழந்துபோன ஜீவனை மறுபடியும் பெற்றுக்கொண்டான். மறுபடியும் பூமியிலே வாழ்வதற்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் லாசருவுக்கு கொடுக்கப்பட்டது. இயேசு பெத்தானியாவுக்கு அடுத்தமுறை வந்தபோது உயிரோடு எழுந்த லாசருவும் இயேசுவோடு பந்தியிருந்தான்.

தேவபிள்ளைகளே, நம் அருமை ஆண்டவர் சர்வ வல்லமையுள்ள தேவன். அவரால் செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. அக்கிரமங்களிலும், பாவங்களிலும் மரித்தவர்களாய் இருந்த நம்மை உயிர்ப்பித்தபோது, இழந்துபோன எல்லாவற்றையும் நமக்கு திரும்பத் தரும்படிச் சித்தமானார்.

நினைவிற்கு:- “மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கி விடுகிறவன் யார்?” (சங். 89:48).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.