No products in the cart.
ஜனவரி 11 – காத்திருந்தார்!
“அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது” (ஏசா. 5:2).
தோட்டக்காரனுக்கு தோட்டத்தில் நடப்படுகிற செடிகளைக்குறித்து ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அது நன்றாகப் படர்ந்து விரியவேண்டுமென்று விரும்புகிறான். பூக்கள் பூத்து, வாசனை பரிமளித்து, காய்கள் காய்க்கவேண்டுமென்று விரும்புகிறான். ஆனால் இவை எல்லாவற்றுக்கும்மேலாக அந்தச் செடி நல்ல கனிகளைக் கொடுக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறான்.
அதுபோலவே திராட்சத்தோட்டத்தை வேலியடைத்த ஆண்டவர், அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, நற்குல திராட்சச்செடியை நாட்டின ஆண்டவர், அதன் நடுவிலே கோபுரத்தைக் கட்டி ஆலையை உண்டுபண்ணின ஆண்டவர், ஒன்றே ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறார். அந்த திராட்சச்செடி நல்ல திராட்சப்பழங்களைத் தரும் என்று காத்திருக்கிறார்.
நம்முடைய நன்மையையும் மேன்மையையுமே நோக்கமாய்க்கொண்டு ஆயிரமாயிரமான நன்மைகளைச் செய்துவருகிற அவர், நம்மிடத்தில் எதிர்பார்க்கிறது ஒன்றே ஒன்றுதான். நல்ல கனிகளை நாம் அவருக்குக் கொடுக்கவேண்டும், அவரை சந்தோஷப்படுத்தவேண்டும், அவருக்குப் பிரியமாய் நடந்து அவரைத் துதித்துப்போற்றவேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. தாவீது இராஜா, “கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்? இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்” என்று சொன்னார் (சங். 116:12,13).
இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் செய்த நன்மைகளை நினைக்கவில்லை. தங்களுக்காக பூமியிலே பிதாவானவர் அனுப்பிக்கொடுத்த குமாரனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிலே சார்ந்து அவருக்கு நல்ல கனி கொடுப்பதற்குப்பதிலாக அவரை சிலுவையில் அறைந்து கசப்பான காடியைக் கொடுத்தார்கள். அவர் அதை வாங்கி ருசி பார்த்தபோது குடிக்க மனதில்லாமல் இருந்தார். காரணம் அது கசப்பான காடி. கசப்பான கனிகள்.
கசப்பான பழங்களைக்கண்டு கர்த்தர் புலம்பிச் சொன்னார், “நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?” (ஏசா. 5:4). “நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன். நீ எனக்கு காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?” (எரே. 2:21) என்று புலம்புகிறார்.
ஏசாயா 5-ம் அதிகாரத்தையும், எரேமியா 2-ம் அதிகாரத்தையும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வாசித்துப்பாருங்கள். இரண்டு பாகங்களும் ஆண்டவர் நாட்டின திராட்சத்தோட்டத்தைக் குறித்தே பேசுகின்றன. “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள். ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள், தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்” (எரே. 2:13).
“என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?” (எரே. 2:6) என்று கர்த்தர் கண்ணீரோடு வாதாடுகிறார். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய கைகளிலே எண்ணற்ற நன்மைகளைப் பெற்ற நீங்கள் கர்த்தருக்கு நல்ல கனிகளைக் கொடுக்கவேண்டாமா?
நினைவிற்கு:- “ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; …. கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான்” (லூக். 13:8,9).