Appam, Appam - Tamil

ஜனவரி 09 – அசைவ உணவு!

“நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்” (ஆதி. 9:3).

கர்த்தர் ஆதாமையும், ஏவாளையும் சிருஷ்டித்தபோது அவர்களுக்கு காய்கறி உணவையே தந்தார் (ஆதி. 1:29). ஆனால் நோவாவின் காலத்திற்குப்பிறகு மனுக்குலத்திற்கு சைவ உணவோடுகூட, அசைவ உணவையும் சேர்த்துத் தந்தருளச் சித்தமானார். பூமியிலே நடமாடுகிற ஜீவஜந்துக்களும், சமுத்திரத்தின் மச்சங்களும் உங்களுக்கு ஆகாரமாயிருப்பதாக என்று கர்த்தர் சொன்னார் (ஆதி. 9:2). மனிதன் தனக்கு இஷ்டமான உணவைப் போதுமான அளவு உண்ணும்படி அவர் கிருபை பாராட்டியிருக்கிறார்.

ஒரு முறை மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக இஸ்ரவேல் ஜனங்கள் முறுமுறுத்து “இந்த வனாந்திரத்தில் யார் எங்களுக்கு அசைவ உணவு தருவார்கள்? இறைச்சி சாப்பிட ஆசைப்படுகிறோம். தினமும் இந்த மன்னாவைச் சாப்பிட்டு சலிப்படைந்திருக்கிறோம்” என்று சொன்னபோது, கர்த்தர் அங்கே காற்றை வீசப்பண்ணினார். அந்த காற்று இஸ்ரவேலரின் பாளயத்திலே காடைகளைக் கொண்டுவந்து குவித்தது. அவர்கள் சாப்பிட்டு, திருப்தியடைந்தார்கள்.

எலியாவைக் கர்த்தர் மூன்றுவிதங்களிலே போஷித்தார். முதலாவது, கர்த்தர் காகங்கள்மூலமாக அசைவ உணவைக் கொடுத்தார். வேதம் சொல்லுகிறது, “காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது” (1 இரா.17:6). இரண்டாவது, கர்த்தர் சாறிபாத் விதவையின் மூலமாய்ப் போஷித்தார். அவளுடைய பானையிலிருந்த மாவும் கலசத்திலுள்ள எண்ணெயும் பஞ்ச காலமெல்லாம் குறைந்துபோகாமல் இருந்தது (1 இரா. 17:13,14). மூன்றாவதாக, கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பி எலியாவைப் போஷித்தார். தேவதூதன் கொண்டு வந்தது என்ன? தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீருமே (1 இரா.19:6).

கர்த்தர் உங்களையும் அற்புதமாய் போஷித்து வழிநடத்துவார். இயேசு சொன்னார், “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்” (மத். 6:31,32).

ஆண்டவராகிய இயேசு இந்த பூமியில் வாழ்ந்தபோது, ஒருமுறை ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும்கொண்டு ஐந்தாயிரம்பேரைப் போஷித்தார். இன்னொருமுறை ஏழு அப்பங்களையும் சில சிறு மீன்களையும்கொண்டு நான்காயிரம் ஜனங்களைப் போஷித்தார். மீன்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த அசைவ உணவினை ஜனங்களெல்லாரும் திருப்தியாய்ச் சாப்பிட்டார்கள்.

இயேசு உயிர்த்தெழுந்தபிறகும்கூட திபேரியா கடற்கரையிலே சீஷர்களை எதிர்பார்த்து, அவர்களுக்கு உணவை சமைத்து வைத்திருந்தார். அது அசைவ உணவு. வேதம் சொல்லுகிறது, “அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்” (யோவா. 21:9). தேவபிள்ளைகளே, இந்த புதிய ஆண்டிலே உங்களையும், கர்த்தர் அப்படியே போஷித்து நடத்துவாராக.

நினைவிற்கு:- “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்” (யோவா. 6:51).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.