Appam, Appam - Tamil

ஜனவரி 08 – உங்களைப்பற்றிய பயம்!

“உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும் (ஆதி. 9:2).

கர்த்தர் நோவாவின் குடும்பத்தாருக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை இந்த புதிய வருடத்திலே உங்களுக்கும் தருகிறார். பூமியிலே நடமாடும் எந்த மிருகத்துக்கும் நீங்கள் பயப்படவேண்டிய அவசியமேயில்லை.

எனக்கு நாயைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஓடி வருகிற மாட்டைப் பார்த்தால் முட்டி விடுமோ என்று பயமாக இருக்கிறது என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம். நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது, இவற்றுக்கெல்லாம் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. வேதம் சொல்லுகிறது, “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோ. 1:7).

தாவீது சிங்கத்தையும், கரடியையும், கோலியாத்தையும், பெலிஸ்தரையும் தைரியமாய் எதிர்த்துநின்றதின் இரகசியம் என்ன? அவர் சொல்லுகிறார், “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” (சங். 34:4). “நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்” (நீதி. 28:1).

பாம்பு உங்களைப் பார்த்து சீறுகிறது என்றால் அது தன்னுடைய வீரத்தினால் சீறுகிறதில்லை. நீங்கள் அதை அடித்துவிடுவீர்களோ என்ற பயத்தில், தன்னைப் பாதுகாக்கவே சீறுகிறது. நீங்கள் பயந்து ஓடுவதினால்தான், நாய் உங்களைத் துரத்துகிறதேதவிர, எதிர்த்து நின்று கையில் கல்லை எடுத்தால் அது ஓடிவிடும். பெரிய பெரிய யானைகளை மனிதன் அடிமையாக்கி, அவைகளை தனக்குப் பணிந்து வேலை செய்யும்படி கட்டளையிடுவதைப் பார்க்கிறோம். பெரிய பெரிய மரங்களையும், உத்திரங்களையும் சுமந்து சென்று மனிதனுக்குக் கீழ்ப்படிந்து அவை வேலை செய்கின்றன. பெரிய எருதுகள் மனிதனுக்கு வண்டி இழுப்பதையும், ஏர் உழுவதையும்கூடப் பார்க்கிறோம்.

ஒருவன் பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருப்பான் என்றால், அந்த வல்லமையைக்கொண்டு அவனால் மிருகங்களை மட்டுமல்ல, அசுத்த ஆவிகளையும் துரத்தமுடியும். சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கிற வல்லமையை கர்த்தர் கொடுத்திருக்கிறார். கர்த்தர் சொல்லுகிறார், “சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்” (சங். 91:13).

சாத்தானுக்கு வெற்றியே கிடையாது. கல்வாரிச் சிலுவையிலே கர்த்தர் அவனுடைய தலையை நசுக்கி, முற்றிலுமாய் தோற்கடித்தார். பிசாசின் கிரியைகளை அழிக்கும்படி வெளிப்பட்ட தேவகுமாரன் அவர் (1 யோவா. 3:8). வேதம் சொல்லுகிறது, “மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்” (எபி. 2:14,15).

தேவபிள்ளைகளே, இயற்கையாகவே கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற அதிகாரம், வல்லமை ஆளுகை ஆகியவற்றோடுகூட பரிசுத்த ஆவியின் வல்லமையும் இணைந்து செயல்படும்போது, இன்னும் கர்த்தருக்காக மகிமையான காரியங்களை உங்களால் செய்யமுடியும்.

நினைவிற்கு:- “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்” (மாற். 16:17,18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.