Appam, Appam - Tamil

செப்டம்பர் 23 – பரலோக தேவனே!

“பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்” (சங். 123:1).

தாவீது, கர்த்தருக்கு நேராய் தன் கண்களை ஏறெடுத்து ஆயிரக்கணக்கான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். கர்த்தரை நோக்கிப் பார்க்க பார்க்க அவருக்கு உயர்வு வந்தது. ஆடுகளை மேய்த்த நிலைமையிலிருந்து இராஜாவாக உயர்த்தப்பட்ட உயர்வு எவ்வளவு பெரியது!

யார் யார் கர்த்தரை நோக்கிப்பார்க்கிறார்களோ, அவர்கள் மென்மேலும் விருத்தியடைவார்கள். மென்மேலும் செழித்தோங்குவார்கள். மிகவும் அதிகமாய் உயர்த்தப்படுவார்கள்.

நம்முடைய வாழ்க்கையும், ஆவிக்குரிய ஜீவியமும் எப்பொழுதும் படிப்படியாக உயருகிற நிலைமையிலே இருக்கவேண்டும். அந்த பரம எருசலேமை நோக்கி, சீயோன் பர்வதங்களை நோக்கி, பெலத்தின்மேல் பெலனடைந்து மகிமையின்மேல் மகிமை பெற்று உயர்ந்துகொண்டேயிருக்கவேண்டும்.

அநேகர் தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்திலே ஒரு அடி ஏறுகிறதும், இரண்டு அடி சறுக்கி விழுகிறதுமாய் இருக்கிறார்கள். ஏறுகிறதும் இறங்குகிறதுமாக அல்லாமல், இரண்டு நினைவுகளினால் குந்தி குந்தி நடக்கிற அனுபவமாக அல்லாமல், அனலுமில்லாமல் குளிருமில்லாமல் தடுமாறுகிற நிலைமையாக அல்லாமல், ஒரே சீராக ஏறிக்கொண்டேயிருக்கவேண்டும். உயர்ந்துகொண்டேயிருக்கவேண்டும்.

தாவீது இராஜா அந்த மலையில் ஏறி ஒலிவமலையின் உச்சியில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குச் சென்றபோது அவருடைய உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பியது. “எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று” என்று சொல்லி அகமகிழ்ந்தார் (சங். 122:2). அதுபோலவே ஒரு நாள் நம்முடைய கால்கள் உயர்ந்து உயர்ந்து பரம எருசலேமில் நிற்கும்போது நமக்கு எத்தனை மகிழ்ச்சியாய் இருக்கும்!

கர்த்தர் சொல்லுகிறார், “நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும் ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும் … வந்து சேர்ந்தீர்கள்” (எபி. 12:22-24).

நம்முடைய கண்கள் அந்த நித்திய இராஜ்யத்தை நோக்கியிருக்கட்டும். பரம வாசஸ்தலங்களையே நோக்கியிருக்கட்டும். ஒருநாள் நம்முடைய ஓட்டம் ஜெயத்துடன் முடியும். அந்த ஒளிமயமான தேசத்தை சுதந்தரித்துக்கொள்ளுவோம். நம்முடைய கண்கள் எப்பொழுதும் கர்த்தருடைய முக அழகையும், சாயலையும், இன்பமான பிரசன்னத்தையும் தரிசித்துக்கொண்டேயிருக்கும்.

அப். பவுல், “நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால் கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்” (கொலோ. 3:1,2) என்று எழுதுகிறார்.

தேவபிள்ளைகளே, கடைசி காலத்துக்கும், கடைசி நேரத்திற்கும் நாம் வந்திருக்கிறோம். உலக முடிவுகுறித்து வேதத்தில் சொல்லப்பட்டுள்ள அடையாளங்களெல்லாம் ஆங்காங்கே நிறைவேறிக்கொண்டிருப்பதை நாம் செய்திகளில் பார்க்கிறோம். அழிந்துபோகிற உலகத்தையோ, அதின் ஆசை இச்சைகளையோ, ஒருநாளும் நோக்கிப்பாராமல், கர்த்தரையே நோக்கிப்பாருங்கள்.

நினைவிற்கு:- “உன் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும் உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்” (ஏசா. 60:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.