No products in the cart.
செப்டம்பர் 07 – ஒருமனப்பாடும், தேவபிரசன்னமும்!
ஒருமனப்பாடும், தேவபிரசன்னமும்!
“நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும், கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்” (1 யோவா. 1:3).
கர்த்தர் தன்னை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தும்போதெல்லாம் ஒரு கூட்ட ஜனங்களைத் தெரிந்துகொண்டார். பழைய ஏற்பாட்டில் யாக்கோபின் பிள்ளைகளாகிய பன்னிரெண்டுபேரையும் தெரிந்துகொண்டு கோத்திரங்களாக்கினார். புதிய ஏற்பாட்டில் பன்னிரெண்டுபேரை சீஷர்களாக தெரிந்துகொண்டு அவர்களை அப்போஸ்தலர்களாக்கினார்.
அன்று இஸ்ரவேலரின்மூலமாக கர்த்தர் தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தி கானான் தேசத்தை சுதந்தரிக்கும்படிச் செய்தார். புதிய ஏற்பாட்டிலே, அப்போஸ்தலர்களைத் தெரிந்துகொண்டு அவர்கள் மூலமாய் சுவிசேஷத்தை அறிவிக்கவும், ஜனங்களை இரட்சிப்புக்குள் கொண்டுவரவும் வழிநடத்தினார்.
அப்படிப்பட்ட தேவனுடைய பிள்ளைகளோடு ஐக்கியம்கொள்ளுவது தேவபிரசன்னத்தையும், தெய்வீக சந்தோஷத்தையும், சமாதானத்தையும் நமக்குள் கொண்டுவருகிறது.
அநேக ஆலயங்களிலே ஒருவருக்கொருவர் அன்பின் ஐக்கியமில்லை. தனித்தனியே வந்துவிட்டு தனித்தனியே என்றுவிடுகிறார்கள். சில இடங்களிலே உயர்ந்த ஜாதிக்கு என்று ஒரு ஆலயம், தாழ்ந்த ஜாதிக்கென்று இன்னொரு ஆலயம் என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். இது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாயிருக்கிறது.
கிறிஸ்து ஒருபோதும் பிரிந்திருப்பதில்லை. அவருடைய சரீரமாகிய சபை பிரிந்திருக்க விரும்புவதுமில்லை. நம்முடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவோடும் இருக்கிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் (1 யோவா. 1:3).
ஒரே இரத்தத்தால் கழுவப்பட்டு, ஒரே ஆவியினால் தாகம் தீர்க்கப்பட்டு, ஒரே பிதா நமக்கு இருக்கும்போது, நமக்குள் பிரிவினைகளோ, சண்டைகளோ, கருத்து வேறுபாடுகளோ இருக்கக்கூடாது. சபை கூடிவரும்போதெல்லாம் தேவனுடைய இனிய பிரசன்னத்தை உணர்ந்து மகிழும்படி பிரிவினைகளை அறவே அப்புறப்படுத்துங்கள்.
“இதோ சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அது …. எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது, அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்” (சங். 133:1-3) என்று வேதம் சொல்லுகிறது.
முதலாவது, நாம் நம் ஆண்டவரிடத்திலே முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அன்புகூரவேண்டும். அதே நேரத்தில் நம்மைப்போல பிறரையும் நேசித்து அன்புகூரவேண்டும்.
தேவபிள்ளைகளே, காண்கிற சகோதரனிடத்தில் அன்புகூராதவன் காணாத கர்த்தரிடத்தில் எப்படி அன்புகூர முடியும்? வீட்டிலானாலும் சரி, சபையிலானாலும் சரி, அங்கே அன்பின் ஐக்கியம் இல்லாவிட்டால் தேவனுடைய பிரசன்னத்தை உணரவே முடியாது.
நினைவிற்கு:- “ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” (மத். 5:23,24).