No products in the cart.
ஏப்ரல் 23 – பெற்றோரிடத்தில்!
“உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” (எபே. 6:2,3).
பெற்றோரிடம் அன்புகூருங்கள். அவர்களை நேசியுங்கள். அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்களைக் கனம்பண்ணுங்கள். வேதம் சொல்லுகிறது, “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” (உபா. 5:16; யாத். 20:12).
பெற்றோரின் இடத்தை வேறு யாராலும் நிரப்பவே முடியாது. பெற்றோரின் அன்புக்கு இணையான அன்பு வேறு ஒன்றுமில்லை. நீங்கள் குழந்தையாய், பேசக்கூடத் தெரியாமல், தவழ்ந்த நாட்களிலே உங்கள் தாயார் எத்தனை இரவுகள் கண்விழித்து உங்களைக் கண்காணித்திருப்பார்கள்! உங்கள் கல்விக்காகவும், உணவுக்காகவும் உங்கள் தந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து பொருள் ஈட்டியிருப்பார்! அப்படிப்பட்ட அன்புள்ள பெற்றோரைக் கனம்பண்ண வேண்டியது எவ்வளவு அவசியம்! எந்தக் காரணம்கொண்டும் உங்கள் பெற்றோர் உங்கள்மேல் கசப்பும், வருத்தமும் கொண்டவர்களாய் கண்களை மூடிவிடக்கூடாது. அது உங்களுக்கு பயங்கரமான சாபமாய் வந்து சேரும்.
“வேதம் சொல்லுகிறது, “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே” (மத். 15:4). “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” (மத். 19:19).
நீங்கள் பெற்றோரில் அன்புகூரும்போது அவர்கள் உங்களை மனதார ஆசீர்வதிப்பார்கள். அந்த ஆசீர்வாதம் உங்களில் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் நிலைநிறுத்தும்.
பெற்றோர் வயதானவர்களானபிறகு அவர்களைக் கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் பிள்ளைகள் எத்தனையோபேர் உள்ளனர். சிலர் தங்கள் தகப்பனையும் தாயையும் பட்டினி போட்டுவிட்டு ஊருக்கு அன்னதானம் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் இயேசுவின் நாட்களிலும் வாழ்ந்தார்கள். இயேசு அந்த மாய்மாலக்காரர்களைப் பார்த்து, “உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்” என்றார் (மத். 15:6).
பிள்ளைகள் கர்த்தரிடத்தில் அன்புகூருவார்களென்றால் நிச்சயமாகவே பெற்றோருக்கும் கீழ்ப்படிவார்கள். “பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது” (எபே. 6:1-3).
குடும்பத்தில் பெண்களுக்கு மாப்பிள்ளை பார்க்கவேண்டுமானாலும், பையன்களுக்கு பெண்பார்க்கவேண்டுமானாலும், பெற்றோரும், பிள்ளைகளுமாகக்கூடி ஜெபித்து தேவனுக்கு சித்தமானதைத் தெரிந்தெடுங்கள். அப்பொழுது அந்த திருமண வாழ்க்கை ஆசீர்வாதமானதாக இருக்கும்.
முற்பிதாவாகிய ஈசாக்கின் மகன் ஏசா புறஜாதியாரிடத்தில் போய் ஏத்தியரின் பெண்களை விவாகம் பண்ணினதால், அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் (ஆதி. 26:34,35). தேவபிள்ளைகளே, நீங்கள் எப்பொழுதும் உங்கள் பெற்றாருக்கு மனமகிழ்ச்சியைக் கொண்டுவருபவராயிருங்கள்.
நினைவிற்கு:- “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” (யாத். 20:12).