Appam, Appam - Tamil

ஆகஸ்ட் 22 – கர்த்தர் தரும் இளைப்பாறுதல்!

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28).

இளைப்பாறுதலைக் கர்த்தர் நமக்கு பழைய ஏற்பாட்டிலும் வாக்குப் பண்ணியிருக்கிறார் (யாத். 33:14), புதிய ஏற்பாட்டிலும் வாக்குப் பண்ணியிருக்கிறார் (மத். 11:28). ஆகவே இளைப்பாறுதல் நம்முடைய பிறப்புரிமை. கர்த்தர் நமக்காகக் கொடுத்த சிறப்பான வாக்குத்தத்தம். அது தெய்வீக ஆசீர்வாதங்களில் ஒன்றாகும்.

‘என்னிடத்தில் வாருங்கள்’. ஆம், அதுதான் ஆண்டவர் இளைப்பாறுதலுக்காக நமக்கு வைத்திருக்கிற ஒரு வழி. ‘வீணாக வருத்தப்பட்டு பாரம் சுமந்து அலைந்துகொண்டிருக்கவேண்டாம். என்னிடம் வாருங்கள். நோயினாலும், வியாதியினாலும் துக்கப்பட்டு, கவலையோடும் கண்ணீரோடும் வாழவேண்டாம். என்னிடத்தில் வாருங்கள். என் பாரத்தை எங்கே இறக்கி வைப்பேன் என்று கலங்கித் தவிக்கவேண்டாம். என்னிடத்தில் வாருங்கள்’ என்று அன்போடு இயேசு கிறிஸ்து இருகரம் நீட்டி அழைக்கிறார். நிச்சயமாகவே அவரண்டை இளைப்பாறுதல் உண்டு.

ஒரு வாலிபன் பயங்கரமான லாரி விபத்தில் சிக்கியபோது அவனுடைய ஒரு கால் சுக்குநூறாக உடைந்துபோனது. அடுத்த காலிலும் பயங்கரமான அடி, வேதனை. அவனை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கே ஒரு காலை அறுவை சிகிச்சை செய்து வெட்டி எடுத்துவிடவேண்டியதாயிற்று. வலி வேதனை தாங்க முடியாமல் இரவு பகலாக துடித்துக்கொண்டிருந்தான். ‘ஐயோ நான் செத்துப் போனால் நன்றாய் இருக்குமே’ என்று இரவெல்லாம் அவன் வேதனையோடு புலம்பிக்கொண்டிருந்தான்.

அவனுக்கு அடுத்தப் படுக்கையில் ஒரு ஊழியக்காரர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். இவன் புலம்பி அழுதுகொண்டிருந்த சத்தமானது அந்த ஊழியக்காரரின் காதுகளில் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது.

அவர் அன்புடன் அவன் அருகிலே சென்று, ‘தம்பி, நான் ஒரு பாடல் பாடட்டுமா’ என்று கேட்டு, ‘காப்பார் உன்னைக் காப்பார், காத்தவர் காப்பார் இன்னும் இனிமேலும் காத்திடுவார். கலங்காதே மனமே காத்திடுவார்’ என்ற பாடலை உருக்கமாகப் பாடி, அவனுக்காக ஊக்கமாய் ஜெபிக்கவும் செய்தார்.

அந்த நேரத்திலே, கர்த்தருடைய கரம் அவனை அரவணைத்ததினாலே, அவன் கண்ணீர்விட்டு அழுதான். தெய்வீக ஆறுதலும், சமாதானமும் அவனுடைய உள்ளத்தில் வந்தது. கர்த்தர் அவனுடைய வேதனைகளை மாற்றிப்போட்டார். அவனுடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு கால் இல்லாதது அவனுக்கு ஒரு கவலையாகவே தோன்றவில்லை.

கர்த்தர் இளைப்பாறுதலை வாக்குப்பண்ண காரணம் என்ன? அவர் ஏற்கனவே நம்முடைய துக்கங்களையும், வேதனைகளையும், நோய்களையும், பெலவீனங்களையும் சிலுவையிலே சுமந்து தீர்த்ததுதான் இதன் காரணம். அவர் வருத்தப்பட்டு வேதனை அனுபவித்ததினாலே நம்முடைய வருத்தங்களையும், வேதனைகளையும் நன்றாக அறிவார். மட்டுமல்ல, அதை நீக்கவும் வல்லவராய் இருக்கிறார். “வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே என்னண்டை வாருங்கள்” என்று உள்ளம் உருகி அழைக்கிறார்.

நினைவிற்கு:- “தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை” (1 இராஜா 8:56).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.