Appam, Appam - Tamil

அக்டோபர் 27 – ஞான இருதயம்!

“நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங். 90:12).

‘பகற்காலத்தைப் பயன்படுத்தவேண்டுமே’ என்ற ஏக்கத்துடன் மோசே பக்தன் இந்த அருமையான ஜெபத்தை ஏறெடுத்தார். அவருடைய வாழ்நாள் மொத்தம் நூற்றிருபது வருடங்கள். அதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

முதல் நாற்பது வருடங்கள், எகிப்தின் அரண்மனையிலே பார்வோன் குமாரத்தியின் மகனாக வாழ்ந்து, சிறந்த கல்வியைக் கற்றுக்கொண்டார். அடுத்த நாற்பது வருடங்கள், மீதியானியருடைய தேசத்திலே சிப்போராள் என்ற பெண்ணைத் திருமணம்செய்து, தன்னுடைய மாமனாரான எத்திரோவின் ஆடுகளை மேய்த்தார். அடுத்த நாற்பது வருடங்கள், இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, பாலும் தேனும் ஓடுகிற கானானை நோக்கி நடத்திச்சென்றார்.

மோசேயின் வாழ்க்கையில் கடைசி நாற்பது வருடங்கள் அற்புதமானவை. மிகவும் பிரயோஜனமானவை. இஸ்ரவேலரின் சரித்திரத்திலே அந்த காலங்கள் மறக்கமுடியாதவை. ஆம், அவர் பகற்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டார். ஆகவேதான், கர்த்தர் மோசேயைக் குறித்து சாட்சிகொடுக்கும்போது, “என் தாசனாகிய மோசேயோ …. என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்” என்றார் (எண். 12:7,8).

அப்படிப்பட்ட தேவனுடைய மனுஷனாகிய மோசே, கர்த்தரிடத்திலே “எங்கள் நாட்களை எண்ணும் அறிவை, காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் ஞான இருதயத்தைத் தாரும்” என்று கேட்டு ஜெபித்தார். இன்றைக்கு மனிதன் அறிவுத்துறையிலே எவ்வளவாய் முன்னேறிவிட்டான். சந்திரமண்டலத்திற்குக்கூட சென்றுவிட்டான்.

கணினி மூலமாக அரிய பெரிய சாதனைகளை நிகழ்த்திவிட்டான். விமானத்திலும், விண்கலங்களிலும், ராக்கெட்டுகளிலும் ஏறி உலகைச்சுற்றிச்சுற்றி வருகிறான். அவனுக்கு விஞ்ஞான அறிவு உண்டு, இரசாயன அறிவு உண்டு, மருத்துவ அறிவு உண்டு. ஆனால் அவனுக்கு இல்லாத ஒரு அறிவு நாட்களை எண்ணும் அறிவுதான்.

சிறைச்சாலையிலே தூக்குக்காகக் காத்துக்கொண்டிருந்த ஒரு கைதி ஒருமுறை சொன்னான், “ஐயா, வெளியிலுள்ளவர்களுக்கு நாட்களை எண்ணும் அறிவு இல்லை. ஆனால் எனக்கு இத்தனாம் நாளில், இத்தனாம் மணி நேரத்தில், தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என்ற தீர்ப்பு வந்துவிட்டபடியால், நாட்களை வேதனையோடு எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.

இரண்டு காரியங்கள் எப்போதும் நமக்கு முன்பாக நின்றுகொண்டிருக்கின்றன. ஒன்று, நம்முடைய மரணம், அடுத்தது இயேசுகிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகை. இரண்டிலே எது முதலாவது நம்மை சந்திக்கும் என்பது நமக்குத் தெரியாது.

ஒருவேளை இயேசுவை அறியாத மக்களுக்கு நாட்களை எண்ணும் அறிவானது பயத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு கர்த்தர் ஞான இருதயத்தைத் தந்திருப்பதால் எந்த பயமுமில்லை. தேவபிள்ளைகளே, ஒரே ஒருமுறை பூமியிலே வாழப்போகும் இந்த வாழ்க்கையில் கர்த்தருடைய சித்தத்தின்படி செய்ய உங்களை ஒப்புக்கொடுப்பீர்களா?

நினைவிற்கு:- “நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள்” (எபே. 5:16,17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.