No products in the cart.
அக்டோபர் 12 – மலையின்மேல்!
“(இயேசு) தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமான போது அங்கே தனிமையாயிருந்தார்” (மத். 14:23).
இயேசு கிறிஸ்து, உயர்ந்த மலையின் உன்னத அனுபவங்களை ஆவலோடு வாஞ்சித்தார். அவர் ஜெபம்பண்ண விரும்பினபோதெல்லாம் தனிமையை விரும்பி மலையின்மேல் ஏறினார். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய சுவிசேஷங்களில், அநேக சந்தர்ப்பங்களில் தனித்து இருக்கும்படியாக மலைகளுக்குச் சென்றதையும், ஜெபிக்கும்படியாக மலையுச்சிக்கு ஏறினார் என்பதையும் வாசிக்கிறோம்.
இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் உயர உயர ஏற வேண்டும். ஆவிக்குரிய உன்னதமான அனுபவத்தைப் பெறவேண்டும். தேவனுடைய பரிபூரணத்தை நோக்கி, ஒவ்வொருநாளும் ஏறுகிறவர்களாய்க் காணப்படவேண்டும்.
ஒவ்வொருநாளும் மேன்மேலும் ஏறக்கூடிய உன்னதமான அனுபவத்தைக் கர்த்தர் வைத்திருக்கிறார். கிருபையின்மேல் கிருபை பெறும்படி, பெலத்தின்மேல் பெலனடையும்படி, மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபமாகும்படி தேவபிள்ளைகள் உயர்ந்துகொண்டே இருக்கவேண்டும். நான் சிறுவனாக இருக்கும்போது, சில வேடிக்கையான கணக்குகளை மற்றவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். உதாரணமாக, ஒரு பல்லி சுவரில் ஐந்து அடி உயரத்தில் இருக்கிறது. ஒரு மணிக்கு நான்கு அடி தூரம் ஏறி மூன்று அடி சறுக்குகிறது. அப்படியானால் ஐந்து மணி நேரத்தில் அது எவ்வளவு உயரத்தில் இருக்கும் என்று கேட்பார்கள்.
அநேக கிறிஸ்தவர்களுடைய அனுபவமும் அதுதான். ஞாயிற்றுக்கிழமையில் பரிசுத்தத்தில் ஏறுவார்கள். மற்ற ஆறு நாட்களும் ஜெப ஜீவியத்திலும், பரிசுத்தத்திலும் இறங்கிக்கொண்டே இருப்பார்கள். சில நாட்கள் மலையுச்சிக்கு வந்துவிடுவார்கள். சில நாட்களோ பாதாளத்தின் அடிப்பகுதியில் தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருப்பார்கள்.
இவர்கள்தான் அனலுமில்லாமல், குளிருமில்லாமல் தடுமாறுகிற கிறிஸ்தவர்கள். இவர்கள் தொடர்ந்து கர்த்தரில் முன்னேறுகிறதில்லை. ஒழுங்கான ஜெப ஜீவியம், வேத வாசிப்பு இவர்களிடம் இருப்பதில்லை. கர்த்தருடைய ஐக்கியத்தில் குறைவுபடுகிறதினால், இவர்கள் விழுந்து விழுந்து எழுந்துகொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் நீங்களோ, பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தின்மேல் பசிதாகம் உள்ளவர்களாக மேன்மேலும் உயர்ந்துகொண்டேயிருக்கவேண்டும். அப். பவுல் மூன்றாம் வானம் என்னப்படுகிற பரதீசு வரையிலும் எடுத்துக்கொள்ளப்பட்டதை 2 கொரி. 12-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.
சாதாரண ஒரு மனிதனால் மூன்றாம் வானத்திற்கு ஏற முடியாது. அப். யோவான் பத்மு தீவில் சிறையிருந்தபோது, கர்த்தர் பரலோகத்திலிருந்து யோவானை நோக்கி, “இங்கே ஏறிவா” என்று அழைத்தார் (வெளி. 4:1). ஆவிக்குரிய ஜீவியத்தில் வாஞ்சையுள்ளவர்களை கர்த்தர் ஆவிக்குரிய உன்னதங்களுக்கு கொண்டுசெல்லுகிறார்.
தேவபிள்ளைகளே, உங்களுடைய கிறிஸ்தவ ஜீவியத்தில் உயர்ந்த அனுபவத்தைப் பெறவேண்டுமென்ற வாஞ்சையும், விருப்பமும், ஏக்கமும் இருக்குமென்றால், கர்த்தர் உங்களை அதிக உயரத்திற்கு அழைத்துச்செல்ல ஆவலாய் இருக்கிறார். ஆவியில் அனல்கொண்டவர்களாய் உயர்ந்துகொண்டேயிருங்கள்.
நினைவிற்கு:- “இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீஷருடனேகூட உட்கார்ந்தார்” (யோவான் 6:3).