Appam, Appam - Tamil

அக்டோபர் 05 – சீனாய் மலை!

“விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்” (யாத். 34:2).

கர்த்தர் சீனாய் மலையைக்குறித்து முதல்முறை பேசும்போது, “நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்” (யாத். 3:12).

சீனாய் மலை என்பது ஆராதனையின் இடம். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஆவியோடும், உண்மையோடும் ஆராதனை செய்வதற்காகவே கர்த்தர் அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து நீங்கலாக்கிக் கொண்டுவந்தார்.

இரட்சிக்கப்பட்ட ஒருவனுடைய அதிமுக்கிய நோக்கம் தேவனைத் துதித்து, ஆராதித்து மகிழவேண்டும் என்பதாகவே இருக்கவேண்டும். துதிக்கத் துதிக்க தேவனுடைய பிரசன்னம் இறங்கி வருகிறது. துதியின் மத்தியிலே வாசம் பண்ணுகிறவர் அருமையாயும், அன்போடும் இறங்கி உலாவுகிறார்.

இஸ்ரவேல் ஜனங்கள் முதல்முறையாக ஒன்றாகக்கூடி கர்த்தரை ஆராதித்த இடம் சிவந்த சமுத்திரத்தின் மறுகரை ஆகும். பார்வோனும், அவனுடைய சேனைகளும் சிவந்த சமுத்திரத்தில் தள்ளப்பட்டபோது, ‘கர்த்தரைப் பாடுவேன் அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார். குதிரையையும், குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார்’ என்று பாடி ஆராதித்தார்கள்.

அவர்கள் பாடினதையும், ஆராதித்ததையும் யாத்திராகமம் 15-ம் அதிகாரத்திலே வாசிக்கலாம். பாவங்களை மன்னித்து, சாபங்களை முறித்து, சத்துருவின் கையிலிருந்து விடுதலையாக்கின அன்பின் இரட்சகருக்கு எப்படி ஆராதனை செய்யாமல் இருக்கமுடியம்? அவரைத் துதித்துப் பாடாமல் எப்படி இருக்கமுடியும்?

ஆரோனின் சகோதரியாகிய மிரியாமுக்கு அப்பொழுது ஏறக்குறைய தொண்ணூறு வயதாய் இருந்திருக்கக்கூடும். “மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்” (யாத். 15:20).

சீனாய் மலைக்குச் சென்றபோது அந்த ஆராதனை உச்சக்கட்டத்திற்குச் சென்றிருந்திருக்கக்கூடும். மேகஸ்தம்பங்களும், அக்கினிஸ்தம்பங்களும் அவர்களை வழிநடத்தின ஒவ்வொருநாளும் தேவதூதர்களின் உணவாகிய வானத்து மன்னாவைப் புசித்தார்கள். காண்டாமிருகத்தைப்போல பெலனடைந்தார்கள். இன்றைக்கு சீனாய் மலை உங்களை அழைக்கிறது. ஆராதனை செய்ய வாருங்கள்.

சீனாய் மலையிலே கர்த்தர் உங்களோடு உடன்படிக்கை செய்கிறார். கட்டளைகளையும், கற்பனைகளையும் கொடுக்கிறார். தேவன் கொடுத்த நியாயப் பிரமாணத்தையும், பத்துக் கட்டளைகளையும் மோசே இஸ்ரவேலர் சார்பாகப் பெற்றுக்கொண்டார். நாற்பது நாட்கள் மோசே தேவ சமுகத்திலே பாடி, துதித்து, ஆராதித்திருப்பார்.

மோசே கர்த்தருடைய பர்வதமாகிய சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தபோது, அவருடைய முகம் பிரகாசித்தது. தேவஜனங்களால் மோசேயினுடைய முகத்தைப் பார்க்கக்கூடாதபடி அந்த மகிமை அவ்வளவு அதிகமாய் இருந்தது (யாத். 34:35). தேவபிள்ளைகளே, ஆராதனை செய்ய சீனாய் பர்வதத்திற்கு வாருங்கள். உங்கள் முகமும் வாழ்க்கையும் பிரகாசிக்கும்.

நினைவிற்கு:- “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்” (ஏசா. 43:21).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.