Appam, Appam - Tamil

அக்டோபர் 01 – அரராத் மலை!

“பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று” (ஆதி. 8:4).

நோவாவையும், அவனுடைய குடும்பத்தினரையும் சுமந்துகொண்டு உயர உயரச் சென்ற பேழையானது, முடிவாக அரராத் மலையில் தங்கிற்று. “அரராத்” என்ற வார்த்தைக்கு “பரிசுத்த பூமி” என்பது அர்த்தம். இது ஒரு செழிப்பான மலை. தற்போதைய அர்மேனியா தேசத்திலே இந்த மலை இருக்கிறது. இதனுடைய உயரம் ஏறக்குறைய ஏழாயிரம் அடிகளாய் இருந்தபோதிலும், மலையின் உச்சியில் அநேக செழிப்பான மைதானங்கள் இருக்கின்றன.

நோவாவின் பேழையானது, மழைப் பொழியப்பொழிய உயர்ந்துகொண்டே இருந்தது. பின்மாரியின் மழையாக, பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் ஊற்றப்படும்போது, நீங்களும் அதைப்போலவே நீங்கள் அறியாத உயர்வை அடைவீர்கள். நோவாவின் பேழையிலே சுக்கானோ, இஞ்சினோ இல்லை. மனித முயற்சியினாலோ, சுய ஞானத்தினாலோ எந்த விதத்திலும் அதை இயக்கவே முடியாது. அதை வலதுபக்கமோ, இடதுபக்கமோ திருப்பவும் முடியாது. அதின் ஒவ்வொரு அசைவும் மழைப்பொழிவின் அடிப்படையிலேயே அமைந்தது.

ஆனால், அந்தப் பேழை நோவாவையும், அவருடைய குடும்பத்தையும் உயர்த்திக்கொண்டே சென்றது. அரராத் மலைமட்டும் அவர்கள் உயர்ந்துகொண்டே சென்றார்கள். நீங்களும் ஆவியானவருக்கு உங்களை ஒப்படைத்துவிடும்போது கணுக்கால் அளவிலிருந்து துவங்கி, முழங்கால் அளவிற்கும், பின்பு இடுப்பளவிற்கும், இறுதியில் நீச்சல் அளவிற்கும் உங்களை வழிநடத்திச் செல்லுவார். மலைக்கு மேலாய்ச் செல்லுகிற பாக்கியமான அனுபவத்தைத் தந்தருளுவார்.

நோவாவின் காலத்தில், வானத்தின் மதகுகள் திறந்து மழை மிக அதிகமாய்ப் பொழிந்தது. அதுபோல, கர்த்தருடைய வருகைக்கு முன்பாக பரிசுத்தாவியின் அபிஷேகம் தேசமெங்கும் ஊற்றப்படும். ஆகவே, “பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்” (சகரியா 10:1). “மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” (யோவே. 2:28) என்று கர்த்தர் வைராக்கியமாய்ச் சொல்லியிருக்கிறார்.

இன்று பரிசுத்த ஆவியின் பின்மாரி எல்லா இடங்களிலும் ஊற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது ஆவியானவருடைய காலம். சபையாகிய பேழை மத்திய ஆகாயத்தை நோக்கி புறப்படுகிற காலம் நெருங்கி வந்துவிட்டது. நீங்கள் அரராத் மலையை நோக்கி அல்ல, கன்மலையாகிய கிறிஸ்துவை நோக்கி உயர உயரச் செல்லுவீர்கள். எக்காள சத்தம் தொனிக்கும்போது, வான்புறாவான ஆவியானவர், சபையாகிய பேழையை கிறிஸ்துவாகிய மணவாளனை நோக்கி அருமையாக நடத்திச்செல்லுவார்.

நோவாவின் காலத்தில் நாற்பது நாட்கள் இடைவிடாமல் மழை பெய்துகொண்டே இருந்தது. “நாற்பது” என்ற எண் நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. வேதத்தில் மொத்தம் நாற்பது பெரிய நியாயத்தீர்ப்புகள் உண்டு. யோனா நினிவேக்குப் போய் பிரசங்கிக்கும்போது, அந்த மக்கள் மனந்திரும்ப நாற்பது நாட்களைத் தவணையாகக் கொடுத்தார். அவர்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

தேவபிள்ளைகளே, உங்களுக்கும் கிருபையின் நாட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதோ, பேழையின் வாசல் அடைக்கப்படுகிற நேரமும் வந்துவிட்டது. கிறிஸ்துவாகிய பேழைக்குள் ஓடி வந்துவிடுங்கள்.

நினைவிற்கு:- “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்குள் ஓடிவருவார்கள்” (ஏசா. 2:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.