No products in the cart.
மே 30 – யேகோவா ஈலியோன்
“உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்” (சங். 7:17).
“யேகோவா ஈலியோன்” என்ற கர்த்தருடைய நாமம் தமிழில் உன்னதமான தேவன் என்று மொழி பெயர்க்கப்படுகிறது. நம்முடைய தேவன் மகா உன்னதமான தேவன். அவர் உன்னதங்களில் வாசம் பண்ணுகிறவர் (சங். 113:5). அவர் உன்னதமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர்.
முதலாவதாக, உன்னதமான தேவன் உங்களை உன்னதமான ஆசீர்வாதங்களால் ஆசீர்வதிக்கிறார். ஆபிரகாம் ஆசீர்வதிக்கப்பட்டதைப் பாருங்கள், “உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார்” (ஆதி. 14:18-20).
இரண்டாவதாக, உன்னதமான தேவன் உங்களுக்கு உன்னதமான அடைக்கலத்தை தந்தருளுகிறார். வேதம் சொல்லுகிறது, “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்” (சங். 91:1).
உன்னதமானவரின் மறைவு எவ்வளவு விசேஷமானது! சர்வ வல்லவரின் நிழல் எவ்வளவு பாதுகாப்பானது! அங்கே வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்பும் அடைக்கலமுண்டு. அவர் தன்னுடைய அன்பின் சிறகுகளாலே உங்களை மூடுவார். அவருடைய செட்டைகளின்கீழே அடைக்கலம் புகுவீர்கள்.
மூன்றாவதாக, உன்னத தேவன் உன்னத பெலனாகிய பரிசுத்த ஆவியினாலே உங்களை நிரப்புகிறார். “நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்” என்று சொன்னதைப் போலவே சீஷர்களை உன்னத ஆவியினால் நிரப்பினார் (லூக். 24:49).
பரிசுத்த ஆவி அவர்கள்மேல் இறங்கி வந்தபோது அவர்கள் பெலனடைந்தார்கள். எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைசி பரியந்தமும் சாட்சிகளாய் விளங்கினார்கள் (அப். 1:8).
நான்காவதாக, உன்னதமான தேவன் “உன்னதங்களில் அவரோடேகூட உட்காரவும் செய்தார்” (எபே. 2:7). ஆசீர்வாதங்களிலே பூமிக்குரிய ஆசீர்வாதங்களுமுண்டு. ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுமுண்டு. நித்தியத்திற்குரிய ஆசீர்வாதங்களுமுண்டு. அதே நேரம், உன்னதங்களுக்குரிய ஆசீர்வாதங்களுமுண்டு.
உன்னதங்களிலே தேவனோடு உலாவி உன்னதப்பாட்டுகளைப் பாடி உன்னதமானவரின் நேசத்தால் நிரம்பியிருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! நாம் என்றென்றைக்கும் உன்னதமானவரோடு பரலோக இராஜ்யத்தில் நித்திய நித்தியமாக மகிழ்ந்திருப்போம்.
தேவபிள்ளைகளே, உங்கள் மூலமாய் உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு எப்பொழுதும் மகிமை உண்டாகட்டும். சங்கீதக்காரர் சொல்லுகிறார், “வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள். உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்” (சங். 148:1). “உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?” (சங். 113:5). “உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது” (சங் 89:13).
நினைவிற்கு:- “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே. 1:3).