bandar togel situs toto togel bo togel situs toto musimtogel toto slot
Appam, Appam - Tamil

மே 15 – கனியும், விதையும்!

“பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்” (ஆதி. 1:11).

கனிகளுக்குள் விதைகள் மறைந்திருக்கின்றன. ஒவ்வொரு விதைக்குள்ளும் ஜீவனிருக்கிறது. அந்த ஜீவன் புதிய மரங்களை முளைப்பிக்கக்கூடிய வல்லமை உடையதாயிருக்கிறது. கனிகள் இல்லாவிட்டால் விதைகள் இல்லாததுபோல, கனிகொடாத விசுவாசியால் ஆத்தும ஆதாயம் செய்யமுடியாது.

மரங்கள் கனிகளைக் கொடுக்கின்றன. அதே நேரத்தில் விதைகளையும் பிறப்பித்து தங்கள் ஜாதி மரங்களை இனவிருத்தி செய்வதில் கண்ணும்கருத்துமாய் இருக்கின்றன. பறவைகளைக் கவருவதற்கு, அந்தக் கனிகளில் அழகிய நிறத்தையும், மணத்தையும், சுவையையும் வைத்ததுடன், உள்ளே கெட்டியான விதைகளையும் தேவன் வைத்திருக்கிறார். அதன் மூலம் அந்த மரங்கள் நூறாகவும் ஆயிரமாகவும் பெருகி பூமியை நிரப்புகின்றன. விதையே இல்லாமல் வெறும் கனியைமட்டுமே கொடுத்துக்கொண்டிருந்தால் அந்த மர இனம் பெருகாமல் விரைவில் அழிந்துவிடும் அல்லவா!

கனி கொடுக்கும் விசுவாசிகளே, உங்களில் ஆத்தும ஆதாய விதை உண்டா? நீங்கள் நல்ல கிறிஸ்தவர்கள் என்று பெயர்பெற்றால்மட்டும் போதாது. ஆத்தும ஆதாயம் செய்யும் கிறிஸ்தவர்களாகவும் விளங்கவேண்டும். இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மூன்று சதவீதத்திற்கும் நான்கு சதவீதத்திற்கும் இடையே பல ஆண்டுகளாகத் தள்ளாடிக்கொண்டிருப்பதின் காரணம் என்ன? ஆத்தும ஆதாயம் போதுமான அளவு செய்யாததினால்தான் அல்லவா!

மீண்டும் அந்தக் கனிகளையும் விதையையும் சிந்தித்துப்பாருங்கள். ஒரு சிறு விதைக்குள் பெரிய மரத்தின் குணாதிசயங்கள் அனைத்தும் அடங்கியிருக்கிறது. அந்த மரத்தின் இலைகள், பூக்கள், பழங்கள் மற்ற எல்லா சுபாவங்களும் அந்த சிறிய விதைக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பது எத்தனை பெரிய ஆச்சரியம்! ஒரு சிறிய பாட்டிலுக்குள் ஒரு பெரிய மலையை அடக்கி வைத்திருப்பதுபோல அந்த விதைக்குள் பெரிய மரங்கள் அடங்கியிருக்கின்றன.

ஒவ்வொரு விதைக்குள்ளும் ஜீவனிருக்கிறது. அந்த விதை வேரூன்றி வளரும்வரையிலும் தேவையான உணவும் அதற்குள் இருக்கிறது. உள்ளே இருக்கும் இளம் குருத்து பாதுகாக்கப்படும்படி அந்த விதையைச் சுற்றிலும் கடினமான ஒரு ஓடு காணப்படுகிறது. கர்த்தர் எத்தனை ஞானமாய் அதை சிருஷ்டித்திருக்கிறார்!

“பரலோக ராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும்” (மத். 13:31,32).

தேவபிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய ஜீவ விதைகள் கர்த்தருடைய வசனமே (லூக். 8:11). கர்த்தருடைய வார்த்தை மட்டுமே ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது. வசன விதைகளை விதைக்கும்போது ஆத்துமாக்கள் ஆதாயம் செய்யப்படுகிறார்கள். புதிய ஜீவனோடு கிறிஸ்து அவர்கள் வாழ்க்கையில் முளைத்து எழும்புகிறார்.

தேவபிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையிலும் ஊழியத்திலும். வேத வசனங்களையே விதைப்பீர்களாக! உங்கள் வாழ்க்கை கனிதருவதாய் அமைய இதுவே சரியான வழி.

நினைவிற்கு:- “சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்” (லூக். 8:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.