Appam, Appam - Tamil

மே 07 – வெளிச்சம் நல்லது!

“வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்” (ஆதி.1:4).

கர்த்தர் ஒவ்வொருநாளும் தான் சிருஷ்டித்த எல்லா சிருஷ்டிப்பையும் சந்தோஷத்தோடு நோக்கிப்பார்த்தார். அந்த சிருஷ்டிப்புகள் அவருக்கு திருப்தியளித்தன. முதல் நாள் வெளிச்சத்தை உண்டாக்கின உடனே வெளிச்சம் “நல்லது” என்று கண்டார்.

ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் மட்டுமே மொத்தம் ஏழு தடவை “நல்லது” என்கிற வார்த்தையை கர்த்தர் திரும்பத் திரும்பச் சொல்லுகிறார். கர்த்தருக்கு எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான். புறஜாதியார்தான் ராகு காலம், எமகண்டம் என சில நேரங்களையும் நாட்களையும் அமங்கலம் என்று தள்ளிவைத்துவிடுகிறார்கள்.

நான் இஸ்ரவேல் தேசத்தில் உள்ள கானாவூருக்குப் போயிருந்தபோது, யூத வழிகாட்டியாய் வந்தவர், மூன்றாம் நாளிலே கானாவூரில் கலியாணம் நடந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறதின் இரகசியம் என்ன தெரியுமா என்று கேட்டார்.

நான் சிந்தித்தேன். வாரத்தின் முதலாம்நாள் ஞாயிற்றுக்கிழமை. இரண்டாம்நாள் திங்கள்கிழமை. மூன்றாம்நாள் செவ்வாய்க்கிழமை. இந்தியாவில் செவ்வாய்க்கிழமையில் பொதுவாக யாரும் திருமணம் வைக்கமாட்டார்கள். நல்ல நாள் இல்லை என்பார்கள். செவ்வாயை வெறுவாய் என்று சொல்லுவார்கள். செவ்வாய் திருமணம் வைத்தால் தம்பதிகள் பட்டினி, பஞ்சம், வறுமையிலே வாடுவார்கள் என்று ஒதுக்கிவிடுவார்கள்.

ஆனால், அந்த யூத வழிகாட்டி சொன்னார்: இஸ்ரவேல் ஜனங்களுக்கு செவ்வாய்க்கிழமைதான் மிக அருமையான ஒருநாள். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் தாம் சிருஷ்டித்ததை, “நல்லது” என்று கண்ட ஆண்டவர் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை சிருஷ்டிப்பின்போது “நல்லது, நல்லது” என்று இரண்டுமுறை சொன்னார்.

அதாவது அந்த நாள் மாப்பிள்ளைக்கும் ஒரு நல்லது, பெண்ணுக்கும் ஒரு நல்லது. ஆகவே செவ்வாய்க்கிழமை கலியாணம் வைப்பது மிகவும் சிறந்தது என்றார். அப்போது நானும் வேதத்தைத் திறந்து மூன்றாம்நாள் கர்த்தர் இரண்டு முறை நல்லது என்று சொன்னதைக் கண்டேன்.

நாம் புறஜாதியாரைப்போல, நாளும் நட்சத்திரங்களும் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. எல்லா நாட்களும் கர்த்தர் சிருஷ்டித்த நாட்கள்தான். ஒவ்வொரு நாளிலும் கர்த்தர் தம்முடைய பிரசன்னத்தோடு நம்முடைய அருகிலே வந்து நம்மை ஆசீர்வதிக்கிறார். அவர் “நல்லது” என்று எல்லாவற்றையும் நன்றாய் சிருஷ்டித்திருக்கும்போது, “கெட்டது” என்று சொல்லி மனிதன் சில நாட்களை ஒதுக்குவது பெரிய தவறல்லவா?

ஆகவே நாம் புறஜாதியாரின் வழக்கங்களைப் பின்பற்றி நல்ல நாள், கெட்ட நாள் என்று பாகுபடுத்திப் பார்க்கக்கூடாது. வேதம் சொல்லுகிறது, “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்” (சங். 118:24). பூமியிலே ஒவ்வொருநாளுமே கர்த்தர் நமக்குக் கொடுக்கிற ஒரு ஈவாகும். ஒவ்வொரு நாளையும் நாம் முழுமையாய் பயன்படுத்தவேண்டும், வீணாக்கிவிடக்கூடாது என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

தேவபிள்ளைகளே, ஒவ்வொருநாளும் எழும்பும்போது “தேவனே, என்னுடைய ஆயுளில் புதிய ஒரு நாளைத் தந்ததற்காக நன்றி. இந்த நாளை உமக்காக செலவழிக்க உதவிசெய்யும். இந்த நாளின் ஆரம்பமுதல் இரவுவரையிலும் உம்முடைய பிரசன்னமும், சமுகமும், வல்லமையும், கிருபையும், காருணியமும், தயவும் என்னோடு இருக்கட்டும்” என்று சொல்லி ஜெபித்து அந்த நாளை ஆரம்பியுங்கள்.

நினைவிற்கு:- “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்” (லூக். 19:42).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.