No products in the cart.
மார்ச் 01 – ஆவியில் எளிமையுள்ளவர்கள்!
“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது” (மத். 5:3).
மத்தேயு 5-ம் அதிகாரமனது இயேசுகிறிஸ்துவின் மலைப்பிரசங்கமாக அமைந்திருக்கிறது. இந்த அதிகாரத்தின் மூன்று முதல் பத்து வரையுள்ள வசனங்களில் ஆவிக்குரிய முழு வளர்ச்சிக்கு ஒரு மனிதன் கடந்துசெல்லவேண்டிய படிகளைக்குறித்து இயேசுகிறிஸ்து விவரித்திருப்பதுடன், அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆசீர்வாதத்தையும் குறிப்பிடுகிறார். அந்த ஆசீர்வாதங்கள் பாக்கியமான வாழ்வுக்கு அஸ்திபாரங்களாக அமைந்திருக்கின்றன!
ஒருமுறை மகாத்மா காந்தி அவர்கள், “இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்க உபதேசத்துக்கு, இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் உண்மையாக ஒப்புக்கொடுத்து வாழ்ந்திருந்தால் இந்தியா எப்பொழுதோ ஒரு கிறிஸ்தவ நாடாக மாறியிருக்கும்” என்று சொன்னார். மட்டுமல்ல, ரஷ்யா தேசத்தின் பிரபல எழுத்தாளரான டால்ஸ்டாய் அவர்கள், “மலைப்பிரசங்கம் மனித இனம் கடைபிடிக்கவேண்டிய தங்கமயமான சட்டதிட்டம்” என்று புகழ்ந்து போற்றினார்.
ஒருமுறை இந்திராகாந்தி அவர்கள், “எனக்கு எப்பொழுதெல்லாம் தாங்க முடியாத துக்கம் இருதயத்தை பிழிகிறதோ, அப்பொழுதெல்லாம் தனியாகப்போய் மலைப்பிரசங்கத்தின் பகுதிகளை மீண்டும் மீண்டும் வாசிப்பேன். அது என்னுடைய உள்ளத்திற்கு மிகுந்த ஆறுதலைத் தரும்” என்று சொன்னார்கள்.
மலைப்பிரசங்கத்தின் முதல் வசனத்தில் பாக்கியவான்கள் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. நம் தேவன் நம்முடைய சந்தோஷமான, பாக்கியமான வாழ்க்கையின்மேல் அக்கறைக்கொண்டவராக இருக்கிறார். அதில் ஆவியில் எளிமையுள்ளவர்களை முதலாவது பாக்கியவான்களாகக் கர்த்தர் சுட்டிக்காண்பித்து, பூமிக்குரிய பாக்கியங்களைப்பார்க்கிலும் பரலோக ராஜ்யத்திற்கு வழிநடத்தும் பாக்கியத்தை மேலானதாக வலியுறுத்திப் பேசுகிறார். பரலோக ராஜ்யம் அவர்களுடையது என்றும் சொல்லுகிறார்.
கர்த்தர் ஒரு மனிதனுடைய ஆவியின் குணாதிசயத்தைத்தான் முதலில் காண்கிறார். மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். ஆனால் கர்த்தரோ, நம் உள்ளத்தின் ஆழத்திலுள்ள ஆவியைக் காண்கிறார். அங்கே அவர் எதிர்பார்க்கிறதெல்லாம் ஆவியில் எளிமை என்கிற சுபாவத்தைத்தான்.
மனுஷன் தன் நித்தியத்தை பாக்கியமான பரலோக இராஜ்யத்தில் அனுபவிக்கவேண்டுமென்றால், அவன் ஆவியில் எளிமையுள்ளவனாய் காணப்படவேண்டும். மனமேட்டிமையை அகற்றி, தாழ்மையைத் தரித்துக்கொள்ளவேண்டும். ஆவியில் எளிமையாய் ஜீவிப்பது எப்படி என்பதை ஒரு மனுஷன் புரிந்துகொள்ளுவது கடினம் என்பதால் எளிய உதாரணத்தை இயேசு காண்பிக்க சித்தமானார்.
ஒரு சிறு பிள்ளையை தன்னிடத்தில் அழைத்து, இந்த சிறுபிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகஇராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் (மத். 18:4) என்று சொன்னார்.
கள்ளங்கபடற்ற ஒரு குழந்தையைப்போல நீங்கள் ஆவியில் எளிமையுள்ளவர்களாய், தாழ்மையுள்ளவர்களாய், அன்பும் பாசமுமுடையவர்களாய் வாழ்ந்து, கிறிஸ்துவின் இனிய சுபாவத்தை வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்கவேண்டும். தேவபிள்ளைகளே, அந்த பாக்கியமான வாழ்வின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுவீர்களா?
நினைவிற்கு:- “கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்” (சங். 138:6).