No products in the cart.
நவம்பர் 13 – யாப்போக்கு ஆறு!
“(யாக்கோபு) தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்” (ஆதி. 32:22).
ஆதியாகமத்திலே உள்ள பல ஆறுகளில் யாப்போக்கு என்ற ஆறும் ஒன்று. யாப்போக்கு என்ற வார்த்தைக்கு “பாய்ச்சல்” என்பது அர்த்தமாகும். யாப்போக்கு ஆற்றங்கரையில் நடைபெற்ற மிகச் சிறந்த சம்பவம் ஒன்று உண்டென்றால் அது யாக்கோபு தேவனோடு போராடினதுதான். ஆற்றின் கரை கடந்து, யாக்கோபு தனித்து இருந்தபோது ஒரு புருஷன் யாக்கோபோடு போராட ஆரம்பித்தார். விடியுமளவும் அவனோடேகூட போராடினார்.
யாக்கோபும் தொடர்ந்து அவரோடுகூட போராடினான். யாக்கோபு விடாமல் பற்றிக்கொண்டபோது அவர் சொன்னார். “நான் போகட்டும், பொழுது விடிகிறது” என்றார். அதற்கு யாக்கோபு, நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்று சொல்லி அபரிமிதமான ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார். நீங்கள் கர்த்தரிடத்தில் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவும், வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ளவும் போராட வேண்டியதிருக்கிறது. பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது. பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதை பிடித்துக்கொள்ளுகிறார்கள் என்று வேதம் சொல்லுகிறது அல்லவா?
ஒரு சகோதரிக்கு திடீரென்று கண் பார்வை மங்கி முழுவதும் பார்வை தெரியாமல் போய்விட்டது. ஆனால் அந்த நிலைமையில் அப்படியே இருக்க அவர்கள் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. முழங்கால்படியிட்டு ‘கர்த்தாவே என் கண் பார்வை எனக்குத் திரும்பக்கிடைக்கவேண்டும்’ என்று மேலும் மேலும் போராடி ஜெபித்தார்கள். உபவாசமிருந்து ஜெபித்தார்கள். கர்த்தரோடு போராடி ஜெபித்த அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். அவர்கள் கண் பார்வை திரும்பவும் கிடைத்தது.
யாக்கோபு தேவனோடு போராடினதினால் கர்த்தர் யாக்கோபை ஆசீர்வதித்து, “உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்” (ஆதி. 32:28).
யாக்கோபு என்ற பெயருக்கு எத்தன் என்பது அர்த்தமாகும். தேவனோடு போராடியதினால் யாக்கோபினுடைய பெயர், சுபாவங்கள் அத்தனையும் மாறின. இஸ்ரவேல் என்ற பெயரைச் சுதந்தரித்துக் கொண்டார். இஸ்ரவேல் என்ற வார்த்தைக்கு “தேவபிரபு” என்று அர்த்தம். யாக்கோபு அந்த யாப்போக்கு ஆற்றின் கரையை மறந்துவிடவில்லை. அதற்கு பெனியேல் என்று பெயரிட்டார். தேவனோடு போராடுகிறவர்களுக்கு ஒரு பெனியேல் காத்திருக்கிறது. அது ஆசீர்வாதத்தின் பெனியேல். எல்லாவற்றையும் புதியதாய் மாற்றிவிடுகிற பெனியேல்.
வேதத்திலே யாப்போக்கு என்ற ஆறானது பல தேசங்களின் எல்லையாக இருந்தது. இஸ்ரவேலர் யாப்போக்கு வரையிலுமுள்ள தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள். (எண். 21:24, நியா. 11:13). யாப்போக்குக்கு இக்கரையிலுள்ள தேசம் கர்த்தருடைய தேசம். கர்த்தர் ஆசீர்வதிக்கிற தேசம். தேவபிள்ளைகளே, யாப்போக்கு ஆற்றின் அக்கரையில் நின்றுவிடாதபடி இக்கரையிலே கர்த்தருடைய பிரசன்னத்திற்கு நீங்கள் ஓடி வந்துவிடவேண்டும். ஆற்றின் இக்கரையிலே உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்கள் உங்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன.
நினைவிற்கு :- “மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும், ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்; வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை; பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை” (ஏசா. 33:21).