Appam, Appam - Tamil

டிசம்பர் 02 – ஆபிரகாமிலும் பெரியவர்!

“எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய்” (யோவான் 8:53).

ஒரு நாள் இயேசு கிறிஸ்து ஆபிரகாமைக் குறித்து பேசினார். உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என் நாளைக் காண ஆசையாயிருந்தார். கண்டு களிகூர்ந்தார் என்றார். அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.

பாருங்கள்! அன்றைக்கிருந்த யூதர்களுக்கு ஆபிரகாம்தான் பெரியவராய் தோன்றினார். அவரைத்தான் தங்களுடைய பிதா என்று அழைத்தார்கள். ஆபிரகாமிலும் பெரியவர் தங்கள் மத்தியிலே இருப்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இயேசு அவர்களை நோக்கிப் பார்த்து, ‘ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்றார். ஆம், நம் கர்த்தர் பெரியவர்.

ஆபிரகாம் மரித்தார், ஆனால் இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். ஆபிரகாமின் கல்லறை மூடிக் கிடக்கிறது. இயேசுவின் கல்லறையோ அவர் இங்கே இல்லை உயிரோடு எழுந்தார் என்று சாட்சி சொல்லிக்கொண்டேயிருக்கிறது. ஆம். நம் கர்த்தர் பெரியவர்.

ஆபிரகாம் பெரியவர் என்று மேன்மைபாராட்டின யூதர்கள், ஆபிரகாமைக் குறித்து பேசும்போது ஆபிரகாம் மரித்ததையும், தீர்க்கதரிசிகள் மரித்ததையும் ஒப்புக்கொள்ளுகிறார்கள் (யோவான் 8:53). ஆபிரகாம் நூற்று எழுபத்தைந்து ஆண்டுகள் உயிர்வாழ்ந்து அதன் பின்பு மரித்துப்போனார். அவருடைய கல்லறை மம்ரேக்கு எதிரே மக்பேலா குகையில் இன்றைக்கும் இருக்கிறது (ஆதி. 25:9).

ஆனால் இயேசு ஆபிரகாமிலும் பெரியவர். அவரை மரணமோ, பாதாளமோ அடக்கிவைக்க முடியவில்லை. அவர் உயிரோடெழுந்து இன்றைக்கும் ஜீவிக்கிறார். பிதாவின் மடியிலே நமக்காக பரிந்து பேசிக்கொண்டேயிருக்கிறார். இயேசு மீண்டும் வருவார் என்று நாம் விசுவாசிக்கிறோம்.

இன்றைக்கு உலகத்தில் நூற்றுக்கணக்கான மதங்கள், மார்க்கங்கள் இருக்கலாம். மதஸ்தாபகர்களும், தத்துவ ஞானிகளும் வாழ்ந்திருக்கலாம். அவர்கள் வாழ்ந்தார்கள், மரித்தும் போனார்கள். அவர்கள் மத்தியிலே இயேசுவானவர் ஜீவனுள்ளவராய், வல்லமையுள்ளவராய், மகிமையுள்ளவராய் விளங்குகிறார். மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயித்தவரையே நாம் ஆராதிக்கிறோம்.

ஆகவேதான் நீங்கள் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் சவால்விட்டு ‘மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?’ என்று முழங்குகிறீர்கள். உயிரோடிக்கும் மீட்பரை அன்று யோபு பக்தன் கண்டபோது சந்தோஷத்தோடு, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்” என்று சொல்லி மார்தட்டி முழங்கினார் (யோபு 19:25).

ஆபிரகாமும் அனைத்து முற்பிதாக்களும் மரித்தார்கள், தற்பொழுது இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள். அன்று தானியேலுக்கு தேவதூதன் சொன்னான்: “நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய்” (தானி. 12:13). தேவபிள்ளைகளே, நம் கர்த்தர் உயிர்த்தெழுந்தவரும், ஜீவனுள்ளவருமாயிருக்கிறார். அவர் பெரியவர்.

நினைவிற்கு:- “பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” (வெளி. 1:17,18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.