Appam, Appam - Tamil

ஜுன் 30 – நித்திய மதுரம்!

“இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” (வெளி. 21:4).

மாரா மதுரமாகும். இம்மையிலும் கர்த்தர் மதுரமாக்கித் தருவார். நித்தியத்திலும் மதுரமாக்கித் தருவார். ஒருநாள் இந்த உலகத்தின் ஓட்டத்தை முடித்துவிட்டு கர்த்தருடைய இராஜ்யத்திற்குள் செல்லும்போது, எல்லாத் துயரங்களும் மாறி மறைந்துபோகும். நித்திய மகிழ்ச்சி அங்கே உண்டாயிருக்கும்.

வேதம் சொல்லுகிறது, “நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்” (எபி. 12:22-24).

பரலோகத்தில் கண்ணீர் இல்லை. கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார். வேதனையின் நாட்கள் முடிந்துபோயின. யோபு பக்தன் துயரத்தோடு சொன்னார், “என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது” (யோபு 16:20). தாவீது சொன்னார், “என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்” (சங். 56:8).

எரேமியா தீர்க்கதரிசி, “ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்” என்று புலம்பி அழுதார் (எரே. 9:1). ஆனால் பரலோகத்தில் பிரவேசிக்கும்போது, எனக்கு இனி கண்ணீர் இல்லை என்று சொல்லுவார். மட்டுமல்ல, அங்கே துக்கம் இல்லை, அலறுதல் இல்லை, வருத்தமும் இல்லை. முந்தின எல்லா வருத்தங்களும் ஒழிந்துபோயின (வெளி. 21:4) என்று வேதம் சொல்லுகிறது.

பூமிக்குரிய வாழ்க்கையில் பல துக்கங்களும் துயரங்களும் உங்களை வேதனைப்படுத்தக்கூடும். ஆனால் பரலோகமோ கசப்பு என்பதே இல்லாமல் முழுவதும் மதுரம் நிரம்பியிருக்கிற ஒரு இடம். அந்த ஒளிமயமான தேசத்திலே இயேசுவுடைய மார்பிலே சாய்ந்து நாம் சுகித்திருப்போம். மட்டுமல்ல, பரலோகத்தில் சாபமில்லை. “இனி ஒரு சாபமுமிராது” என்று வெளி. 22:3-லே வாசிக்கிறோம். ஆதாமுக்குள் உலகம் சபிக்கப்பட்டது. ஆனால் இயேசுவோ சபிக்கப்பட்ட சிலுவை மரத்தில் தொங்கினார். எல்லா கசப்புகளையும் ஏற்றுக்கொண்டார். இனி சாபம் நம்மைத் தொடர முடியாது.

பரலோகத்தில் பசியில்லை, தாகமில்லை. “இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை” (வெளி. 7:16). அங்கே நாம் சுவைத்து மகிழக்கூடிய எல்லா கனிகளும் உண்டு. தேவதூதர்களின் உணவான மன்னா அங்கே உண்டு. ஜீவ விருட்சத்தின் கனிகள் அங்கே உண்டு. பளிங்குபோன்ற ஓடையின் நடுவே நாம் தேவனோடு உலாவி என்றென்றும் மகிழ்ந்திருப்போம்.

பரலோகத்தில் வெயிலாவது உஷ்ணமாவது இல்லை (வெளி. 7:16). அது எத்தனை பாக்கியமான நித்திய தேசம்! தேவபிள்ளைகளே, நமக்காகக் கர்த்தர் அங்கே வாசஸ்தலங்களை ஆயத்தமாக்கினாரே.

நினைவிற்கு:- “தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு” (வெளி. 21:23).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.