Appam, Appam - Tamil

ஜுன் 02 – வஸ்திரங்களின் வாசனை!

“அவன் கிட்டப் போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது (ஆதி. 27:27) என்றார்.

யாக்கோபு தன் தகப்பனிடத்திலே தந்திரமாய் ஆசீர்வாதத்தை வாங்கச்சென்றபோது, தகப்பனாகிய ஈசாக்கு முதலாவது அவனைக் கையினால் தடவிப்பார்த்தார். இரண்டாவது, அவனுடைய வஸ்திரத்தை முகர்ந்துபார்த்தார். அதன் பின்புதான் ஆசீர்வதித்தார். யாக்கோபு தன்னுடைய கைகளுக்குமேலாய் ஒரு ஆட்டின் தோலை உடையாக போட்டிருந்ததினாலே அவனுடைய கைகள் அவனுடைய அண்ணனுடைய ரோமம்மிக்க கரங்களைப்போல இருந்தன.

அடுத்ததாக, யாக்கோபு தன் மூத்த சகோதரனுடைய உடையை உடுத்திக்கொண்டு வந்ததினாலே அந்த உடை வயல்வெளிகளின் வாசனையைப்போல பரிமளித்தது. மூத்த சகோதரனாகிய ஏசாவின் போர்வைக்குள் யாக்கோபு மறைந்திருந்ததினால் எளிதாக தகப்பனுடைய ஆசீர்வாதத்தை ஏமாற்றிப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

நமக்கு ஒரு மூத்த சகோதரன் உண்டு. அவரே இயேசுகிறிஸ்து. அவர்மூலமாகவே நாம் கிருபாசனத்தண்டை தைரியமாய் கிட்டிச்சேர்ந்து, தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். ஈசாக்கு முதலாவது தடவிப்பார்த்தார். பின்பு, முகர்ந்துபார்த்தார்.

அதுபோல பிதாவாகிய தேவன் நம்மைத் தடவிப்பார்க்கும்போது, கல்வாரிச்சிலுவையிலே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவருடைய இரட்சிப்பே நம்மைப் போர்த்தியிருக்கிறதைக் காணட்டும். அந்த ஆட்டுத்தோல் கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற இரட்சிப்பை வெளிப்படுத்துகிறது.

வேதம் சொல்லுகிறது, “மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்” (ஏசா. 61:10).

இரண்டாவதாக, பிதாவாகிய தேவன் நம்மை முகர்ந்துபார்க்கும்போது, நமது வஸ்திரத்தின் வாசனை வயல்வெளிகளின் வாசனையைப்போல இருக்கட்டும். இன்று வயல்வெளிகளிலே அறுவடை மிகுதியாயிருக்கிறது. வேலையாட்களோ மிகவும் கொஞ்சம். வடஇந்திய மிஷனெரிகளுக்கு ஒரு பக்கத்தில் போராட்டங்களும், பாடுகளும் அதிகமாய் இருந்தபோதிலும், ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய் அறுவடை செய்ய முடிகிறது.

நாங்கள் தொலைக்காட்சி ஊழியத்தை ஆரம்பித்தபோது, நிறைய பணம் செலவாகிறதே என்று தயங்கத்தான்செய்தோம். ஆனால், இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் என்று அறிந்தபோது பெரிய வயல்வெளிக்குச் சென்று அறுவடை செய்வதுபோன்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது.

தேவபிள்ளைகளே, நம்முடைய வஸ்திரங்கள் பன்றிகளின் மத்தியிலிருந்து வந்த கெட்டகுமாரனுடைய வஸ்திரங்களைப்போல இராமல், தேவன் ஆசீர்வதித்த வயல்வெளிகளின் வாசனையை வீசுகிறவையாக விளங்கட்டும்.

நினைவிற்கு:- “என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது” (உன். 4:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.