No products in the cart.
ஏப்ரல் 20 – மரணத்தை ஜெயித்தார்!
“மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” (1 கொரி. 15:55).
அன்பான அன்றன்றுள்ள அப்பம் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் இயேசுவின் நாமத்தில் என் அன்பின் உயிர்த்தெழுந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயித்து உயிர்த்தெழுந்தார்.
ஆகவேதான் நாம் மரணமே உன் கூர் எங்கே, பாதாளமே உன் ஜெயம் எங்கே, என்று வெற்றி முழக்கமிடுகிறோம். அவர் சத்துருவை ஜெயித்து உயிர்த்தெழுந்தார். ஆகவே சத்துருவினுடைய வல்லமையின்மேல் நாம் அதிகாரம் பெறுகிறோம். ஆதியாகமம் 5-ம் அதிகாரத்திலே, ஆதாமிலிருந்து வம்ச வரலாறு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆதாம் மரித்தான். ஏவாள் மரித்தாள் என்று மரணத்தைப்பற்றியே பேசப்படுகிறது. ஆனால், உயிர்த்தெழுந்த இயேசு இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவருடைய வல்லமை உயிர்த்தெழுதலின் வல்லமை.
ஒருமுறை ஒரு ஆலயத்தில் பிரசங்கிக்கும்படியாக அழைக்கப்பட்டிருந்தேன். பல கிராமங்களின் வழியாக அங்கு சென்றபோது, தூரத்திலே ஒரு ஆலயம் தெரிந்தது. அந்த ஆலயத்தை நான் நோக்கிப் பார்த்தபோது அங்கே பெரிய எழுத்துக்களில், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்” என்று எழுதப்பட்டிருந்தது. என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று என் உதடுகள் சொல்லச்சொல்ல என்மேல் தேவ வல்லமை இறங்கியதை உணர முடிந்தது.
“என் மீட்பர் உயிரோடிருக்கிறார்” என்று முழங்கியது பழைய ஏற்பாட்டிலுள்ள பக்தனாகிய யோபு. யோபுவைப்போல கொடியப் பாடுகளின் வழியாகச் சென்ற வேறு பரிசுத்தவான்களை வேதத்தில் காண முடியாது. அவர் மனம் தொய்ந்துபோய் துக்கத்திலே மூழ்குகிற சமயத்தில் திடீரென்று கர்த்தர் தரிசனமானார். உயிரோடிருக்கிற தன் மீட்பரை யோபு பக்தன் முகமுகமாய் கண்டபோது பரவசமடைந்தார்.
அவர் சொல்லுகிறார், “ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு, அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்” (யோபு 19:23,24).
யோபு கர்த்தருக்குச் சூட்டிய பெயர் மீட்பர் என்பதாகும். என் மீட்பர் என்று சொந்தம் பாராட்டி உரிமையோடு யோபு பக்தன் அழைத்தார். மீட்பர் என்ற வார்த்தைக்கு மீட்டெடுக்கிறவர், காப்பாற்றுகிறவர், பாதுகாக்கிறவர், இரட்சிக்கிறவர் என்பதெல்லாம் அர்த்தங்களாகும். உலகப்பிரகாரமாய் விபத்திலிருந்து ஜனங்களை மீட்டெடுப்பவர்களையும் மீட்புப் படையினர் என்று அழைக்கக்கூடும். ரவுடிகளின் கையிலே சிக்குண்டவர்களை விடுவிப்பதும் மீட்பு தான்!
ஆனால், கர்த்தரோ நம்முடைய பெரிய மீட்பர். உளையான பாவச் சேற்றிலிருந்தும் கொடிய சாபத்தின் வல்லமையிலிருந்தும், சாத்தானின் கோரப்பிடியிலிருந்தும், பயங்கரமான பாதாளத்திலிருந்தும், நித்திய அக்கினியிலிருந்தும் நம்மை மீட்கிறவர். அவர் பாவத்திலிருந்து நம்மை மீட்டு இரட்சிக்கிற இரட்சகர். நோயிலிருந்து மீட்கும் பரம வைத்தியர். சாபத்திலிருந்து விடுதலையாக்கி நம்மை ஆசீர்வதிக்கிறவர்.
தேவபிள்ளைகளே, அழிக்கும் வல்லமைகொண்ட சக்திகள் பல உண்டு. ஆனால், உயிர்ப்பிக்க வல்லமையுள்ளவர் ஒரே ஒருவர்தான் உண்டு. அவர்தான் உயிரோடு எழுந்த இயேசு கிறிஸ்து.
நினைவிற்கு:- “கிறிஸ்துவும், மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும் பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்” (ரோம. 14:9).