Appam, Appam - Tamil

ஆகஸ்ட் 23 – கோபுரத்தைக் கட்டி!

“அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக் கட்டி…” (ஏசா. 5:2).

நமக்கு ஒரு கோபுரம் உண்டு. அதுதான் கல்வாரி மலையிலே, கொல்கொதா மேட்டிலே நமக்காக உயர்த்தப்பட்ட இயேசுகிறிஸ்து. அவர் சிலுவையிலே உயர்த்தப்பட்டபடியினால் அனைவரையும் தம்பக்கமாய் இரட்சித்து இழுத்துக்கொள்ளுகிறார்.

அதன் “நடுவில்” ஒரு கோபுரம் என்று எழுதப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து கள்ளர்களின் நடுவிலே, இரண்டு சிலுவைகளின் நடுவிலே, ஜீவனைத் தரும் கோபுரமானார். தோட்டத்தின் நடுவிலே நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தினால் வந்த பாவத்தை நீக்க அவர்கள் நடுவிலே கோபுரமானார். ஆம், பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் நடுவிலே அந்த கோபுரம் நின்றுகொண்டிருக்கிறது. அது கி. மு. வுக்கும் கி. பி. க்கும் நடுவிலே வரலாற்றை இரண்டாய்ப் பிரிக்கிற ஒரு கோபுரம். மாம்சபிரகாரமான இஸ்ரவேலருக்கும், ஆவிக்குரியபிரகாரமான தேவனுடைய பிள்ளைகளுக்கும் நடுவிலே நிற்கிற ஒரு கோபுரம்.

பரிசுத்தமுள்ள தேவனுக்கும், பாவம் நிறைந்த மனிதனுக்கும் நடுவே நிற்கிற ஒரு மத்தியஸ்தக் கோபுரம். பரலோகத்திலிருக்கிறவைகளையும், பூலோகத்திலிருக்கிறவைகளையும் ஒன்றாக இணைக்கிற ஒரு கோபுரம். பூமியிலுள்ள மக்களுக்கு மனுஷகுமாரனாகவும், பரலோகத்திலிருக்கிற தேவதூதர்களுக்கு தேவ குமாரனாகவும் நின்று ஏணியாக காணப்படுகிற ஒரு கோபுரம். புறஜாதியாருக்கும், இஸ்ரவேலருக்கும் நடுவே நின்று இருத்திறத்தாரையும் ஒன்றாய் இணைக்கிற ஒரு கோபுரம்.

நம்மை ஐசுவரியவான்களாக்கும்படி அடிமையின் ரூபம் எடுத்தவர், நம்முடைய தரித்திரத்தினால் நம்மை உயர்த்தி ஐசுவரியவானாக்கினார். கிருபையின் ஐசுவரியத்தையும், மகிமையின் ஐசுவரியத்தையும் நமக்குக் காண்பிக்கிற கோபுரமானார். ஏன் அவர் கோபுரமானார்? ஏன் அவர் உயர்த்தப்பட்டார்? வேதம் சொல்லுகிறது, “சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்” (யோவா. 3:14,15).

நீங்கள் பாவத்திலும், சாபத்திலும், வேதனையிலும் நிறைந்திருக்கிறீர்களா? கோபுரமாய் நிற்கிற கல்வாரிச் சிலுவையை நோக்கிப்பாருங்கள். அங்கேயிருந்து பாவ மன்னிப்பாகிய இரத்தம் ஆறுபோல ஓடிவருகிறது. தேவனுடைய கிருபையும், விடுதலையும், ஆசீர்வாதமும் அங்கிருந்து உங்களுக்குக் கிடைக்கிறது.

உங்களுக்காக கோபுரமான அவர் உங்களைப் பாதுகாக்க ஒரு காவற்காரரையும் வைத்திருக்கிறார். அவர்தான் பரிசுத்த ஆவியானவர். அவர் தேவனுடைய திராட்சத்தோட்டமாகிய சபையை இரவும், பகலும் உறங்காமல் கண்காணித்து வருகிறார். அதே நேரம், காவல் கோபுரம்போல் நின்று வாக்குக்கடங்காத பெருமூச்சோடு உங்களுக்காக மன்றாடுகிறார்.

தேவபிள்ளைகளே, கோபுரமான கிறிஸ்துவையும், கோபுரத்தின் காவற்காரராகிய பரிசுத்த ஆவியானவரையும் உங்களுக்குத் தந்த தேவனை ஸ்தோத்தரியுங்கள்.

நினைவிற்கு:- “இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்” (சங். 121:4,5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.