Appam, Appam - Tamil

ஆகஸ்ட் 22 – சிநேகிதனின் அடி ..!

“சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்” (நீதி. 27:6).

உண்மையான சிநேகிதர்கள் உங்களுடைய குற்றங்குறைகளை அன்போடு உணர்த்துவார்கள். அவர்கள் ஒருநாளும் உங்களுடைய செயல்களை வெளியிலே தாரை ஊதி, கொட்டுஅடித்து, பரப்பித்திரியமாட்டார்கள். அவர்கள் உங்களுடைய முன்னேற்றத்தில் உண்மையான அன்பும், கரிசனையும் கொள்வார்கள்.

இந்த உலகத்திலே நட்பும், சிநேகிதமும் சுயநலமாயும், வியாபாரமுமாயும் மாறிவிட்டது. ‘என்னை அவருக்கு அறிமுகம் செய்து வையுங்கள். அவருடைய நட்பு கிடைக்கும் என்றால் நான் முன்னேறி விடுவேன்’ என்று சுயநலமாய் எண்ணுகிறார்கள். மாய்மாலமான பசப்பு வார்த்தைகளைப் பேசி வஞ்சனையாகப் பழகுகிறார்கள். முடிவில் யூதாஸ் முத்தம் கொடுத்து இயேசுவைக் காட்டிக்கொடுத்ததுபோல சுயரூபத்தை வெளிப்படுத்திவிடுகிறார்கள்.

நட்பை விரும்புகிறவன் முதலாவது தன்னுடைய உள்ளத்தின் ஆழத்தையும், அன்பையும் பகிர்ந்துகொள்ளவேண்டும். உங்களுடைய சுயமுயற்சியினால் இரண்டு ஆண்டுகளில் ஓடி ஓடி சம்பாதிக்கும் நண்பர்களின் எண்ணிக்கையைவிட அதிகமான நண்பர்களை உங்களுடைய உண்மையான அன்பையும், கரிசனையையும் காட்டி சேர்த்துவிடலாம். மேலும், அன்பினால் சம்பாதிக்கப்படும் நட்பே உண்மையானதாகவும், நீடித்ததாகவும் இருக்கும். நீங்கள் நட்பை வளரச்செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களா? உங்களுடைய நண்பரோடு அதிக நேரத்தை செலவழியுங்கள். அவர்களுடைய சுக நலன்களை விசாரிக்க அக்கறையுடன் முற்படுங்கள். நேரில் சந்திக்க இயலாமல் போனாலும், டெலிபோன் மூலமோ அல்லது கடிதங்கள் மூலமோ அன்பை வெளிப்படுத்திக்கொண்டேயிருங்கள்.

கிறிஸ்து உங்களோடு உள்ள நட்பை உறுதி செய்துகொள்ளும்படி உங்களுடைய வீட்டைத்தேடி வந்து, கதவைத் தட்டுகிறார். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால் நான் அவனிடத்தில் பிரவேசித்து அவனோடே போஜனம் பண்ணுவேன் என்று அன்போடு அழைக்கிறார் (வெளி. 3:20).

கர்த்தர் உங்கள்மேல் வைத்த அன்பினாலே பரலோக மேன்மையைவிட்டு பூமிக்கு இறங்கிவந்தார் அல்லவா? நம்மைப்போல மாம்சமும் இரத்தமும் உடையவரானார் அல்லவா? அடிமையின் ரூபமெடுத்து சிலுவையைச் சுமந்தார் அல்லவா? அந்த நட்புறவுக்கு ஈடாக நாம் என்னத்தைச் செலுத்தமுடியும்? நீங்கள் நட்புக்கு முழு இலக்கணத்தை அறிந்துகொள்ளவேண்டுமென்றால் கிறிஸ்துவின் அன்பை தியானித்துப்பாருங்கள். கல்வாரி சிநேகிதத்தை உணர்ந்து கர்த்தரைத் துதியுங்கள். அந்த சிநேகிதமும், அன்பும் உங்கள் உள்ளத்தை நிரப்புவதற்கு இடங்கொடுங்கள்.

கர்த்தருடைய அன்பைக் குறித்து மிக அருமையான ஒரு பாடல் உண்டு. “உந்தன் சிநேக வாக்குகள், என்றும் மாறிடாததால், என்னை என்றும் வழிநடத்தும் உந்தன் ஜீவபாதையில்” என்ற வரிகளைப் பாடும்போது ஆண்டவருடைய உச்சிதமான சிநேகிதத்தை எண்ணி உள்ளம் உருகிவிடும். தேவபிள்ளைகளே, இந்த சகோதர அன்பை உங்களுடைய வாழ்க்கையில் செயல்படுத்துவீர்களென்றால் உங்களுடைய சகோதரர்களும், சிநேகிதர்களும் உங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாய் இருப்பார்கள்.

நினைவிற்கு:- “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது” (1 கொரி. 13:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.