No products in the cart.
அக்டோபர் 25 – ஜெயம் வரும் பர்வதம்!
“எங்களுக்கு விரோதமாய் வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்கு பெலனில்லை; …எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” (2 நாளா. 20:12).
பர்வதத்திலிருந்து வருகிற ஒத்தாசைகளிலேயே சிறந்த ஒத்தாசை ஜெயமாகும். கர்த்தர் உங்களுக்கு ஜெயத்தைத் தருகிறவர்.
இராஜாவாகிய யோசபாத்துக்கு விரோதமாக அம்மோன் புத்திரரும், அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள திரளான ஜனங்களும் யுத்தம்பண்ண வந்தபோது, யோசபாத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவருடைய உள்ளம் கலங்கியிருந்தபோதிலும் அவருடைய கண்கள் கர்த்தரையே நோக்கிப்பார்த்தன.
“எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயம் தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்கு பெலனில்லை. நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கிறது” என்றார் (2 நாளா. 20:12).
அவர் கர்த்தரை நோக்கிப்பார்த்தது மட்டுமல்ல, கர்த்தரை ஒருமனப்பட்டு தேடுவதற்கு யூதா எங்கும் உபவாசத்தைக் கூறுவித்தார். அப்படியே யூதா ஜனங்கள் கர்த்தரிடத்திலே சகாயம்தேடக் கூடினார்கள். யூதாவில் உள்ள எல்லா பட்டணங்களிலுமிருந்து அவர்கள் கர்த்தரைத்தேடி வந்தார்கள் (2 நாளா. 20:3,4).
வேதம் சொல்லுகிறது, “அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும் ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்” (2 நாளா. 20:22).
ஒரு குடும்பத்தில் பயங்கரமான பில்லிசூனியம் தொடர்பான போராட்டங்கள் வந்தன. அப்போது அவர்கள் மந்திரவாதிகளையோ, உலக மனுஷர்களையோ நோக்கிப்பார்க்காமல் கர்த்தருடைய பாதத்திலே விழுந்து அவரையே நோக்கிப்பார்க்கத் தீர்மானித்தார்கள். அவர்கள் குடும்பமாக மூன்று நாட்கள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார்கள்.
அதில் ஆச்சரியமான ஒரு காரியம் என்னவென்றால் அவர்கள் வளர்த்த நாயும், பூனையும்கூட உணவு அருந்தவில்லை. அவர்கள் பாயை விரித்து, முழங்கால்படியிட்டு, கண்ணீரோடு ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தபோது அங்கே அவர்கள் வளர்த்த நாயும்கூட அவர்கள் அருகிலே சுருண்டு படுத்துக்கொண்டது. மூன்றாம் நாளிலே கர்த்தர் பலத்த வெற்றியைக் கொடுத்தார். அந்த குடும்பம் விடுதலை அடைந்தது.
நினிவே பட்டணத்தின் மக்கள் அப்படித்தானே செய்தார்கள். நினிவேவின் இராஜா நினிவே எங்கும் உபவாசத்தைக் கூறியபோது அங்கிருந்த ஆடு மாடுகளும்கூட ஒன்றும் ருசிபாராமலும், மேயாமலும், தண்ணீர் குடியாமலும் இருந்தது அல்லவா? (யோனா 3:7).
அப்படியே அவர்கள் உபவாசத்தோடு கர்த்தரை நோக்கிப்பார்த்தபோது, கர்த்தர் தாம் சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு அதை செய்யாதிருந்தார். தேவபிள்ளைகளே, கர்த்தரை நோக்கிப்பாருங்கள். நிச்சயமாகவே நீங்கள் ஜெயம்பெறுவீர்கள்.
நினைவிற்கு:- “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்ககொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1 கொரி 15:57).