No products in the cart.
அக்டோபர் 20 – இஸ்மவேல்!
“பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய். ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக” (ஆதி. 16:11).
பிறப்பதற்கு முன்பாகவே பெயரிடப்பட்டவர்களின் வரிசையிலே, முதலாவது, வருகிறவர், ‘இஸ்மவேல்’ ஆவார். எபிரெயனாகிய ஆபிரகாமுக்கும், எகிப்தியளாகிய ஆகாருக்கும் பிறந்தவன்தான், இஸ்மவேல். ‘இஸ்மவேல்’ என்ற பெயருக்கு, ‘கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டார்’ என்று அர்த்தம்.
அடிமைப்பெண்ணாகிய ஆகாருக்கு ஒரு அங்கலாய்ப்பு இருந்தது. தனக்கு திருமணம் ஆகுமா, நல்ல வாழ்க்கை கிடைக்குமா, குழந்தை பிறக்குமா என்பதுகுறித்தே அவளது அங்கலாய்ப்பு இருந்தது. ஆகாரின் வயிற்றில் இஸ்மவேல் கருவாயிருந்தபோது, தேவதூதன் அவளுக்குத் தரிசனமாகி, ‘ஒரு குமாரனைப் பெறுவாய். கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால் அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக’ என்று சொன்னான்.
இந்த உலகத்தில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மகிழ்ச்சியும், துக்கமும் உண்டு. மலைகளும் பள்ளத்தாக்குகளும் உண்டு. ஆனால் கர்த்தரோ, உங்களுடைய இருதயத்தின் வேண்டுதலின்படி, உங்களுக்குச் செய்கிறவர். விசுவாசத்தோடு அவரைப் பற்றிக்கொள்ளும்போது, அவர் உங்கள் அங்கலாப்பைக்கேட்டு பதிலளிப்பார்.
பிறப்பதற்கு முன்பாகவே பெயரிடப்பட்ட இஸ்மவேல், கர்த்தருடைய எதிர்பார்ப்பின்படி இருக்கவில்லை என்பதே துக்கமான காரியம். அவனுக்குள்ளே பகையாகிய பாவம் குடிகொண்டது. அவனுக்குப் பிறகு ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் கழித்து, சாராள் மூலமாக ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தபோது, தன் தம்பியை அன்போடு அணைத்து, பாசம் காட்டுவதை விட்டுவிட்டு, இஸ்மவேல் அவனைப் பகைத்தான். பரியாசம் பண்ணினான் (ஆதி. 21:9). அவன் துஷ்ட மனுஷனாயிருப்பான் என்றும், அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும் என்று சொல்லியிருந்தபடியே நடந்தது (ஆதி. 16:12).
இதினிமித்தம் அவன் ஆபிரகாமின் வீட்டிலே நிலைத்திருக்க முடியவில்லை. அவனும், ஆகாரும் ஆபிரகாம் வீட்டிலிருந்து துரத்தப்பட்டார்கள். ‘ஆபிரகாமின் வீடு’ என்பது, கர்த்தருடைய சபையைக் குறிக்கிறது. புறஜாதியாராயிருந்த நமக்கு கர்த்தர் அநுக்கிரகம் செய்து, சபையிலே சேர்த்துக்கொண்டார்.
ஆனால் பாவமும், பொறாமையும், பரியாசமும், துன்மார்க்கமும் வரும்போது, கர்த்தர் அவர்களுடைய பெயர்களை ஜீவ புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவார். ஆபிரகாமின் மடியிலே (சபையிலே) இடம் பெறாத ஐசுவரியவானைப்போல, வேதனை நிறைந்த இடத்திற்குப் போய்ச் சேரவேண்டியதிருக்கும்.
“துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபைகளிலும் நிலைநிற்பதில்லை” (சங்.1:5). ஆபிரகாம், இஸ்ரவேலுக்கும் தகப்பன். ஈசாக்குக்கும் தகப்பன். நரகத்தில் தள்ளப்பட்ட ஐசுவரியவானும், ‘என் தகப்பனாகிய ஆபிரகாமே’ என்றுதான் அழைத்தான் (லூக். 16:24).
ஆனால் ஆபிரகாமோ, அவனுக்கு இரக்கம் பாராட்டவுமில்லை. அவனுடைய நாவைக் குளிரப்பண்ணவுமில்லை. தேவபிள்ளைகளே, ஒருபோதும் பொறாமைக்கும், துஷ்டதனங்களுக்கும், இடங்கொடாதிருங்கள். கர்த்தருடைய சபையிலே நிலைத்திருங்கள்.
நினைவிற்கு:- “இஸ்மவேலரும், மோவாபியரும் ஆகாரியரும் …. ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்” (சங். 83:5,7).