Appam, Appam - Tamil

அக்டோபர் 18 – ஊழியம் செய்ய எழுந்த எழுபதுபேர்!

“கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து,..அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்” (லூக். 10:1)

நீங்கள் ஊழியம் செய்து மற்றவர்களை கர்த்தரண்டை திருப்புவதற்காகத்தான் தேவன் பரிசுத்தாவியை தந்திருக்கிறார். ஆகவே, பரிசுத்தாவியாகிய தாலந்தை ஒருபோதும் புதைத்து வைக்காதேயுங்கள். சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும், திருவசனத்தை ஜாக்கிரதையாய்ப் பிரசங்கியுங்கள்.

அநேகர் வல்லமைபெறவும், வரங்களை அடையவும் ஆசைப்படுவார்கள். ஆனால் கர்த்தருக்கு ஊழியஞ்செய்யும்படி தியாகமாய்ப் புறப்படமாட்டார்கள். அநேகருடைய வரங்கள் மங்கி மறைந்து போவதற்கு ஊழியம் செய்யாதது ஒரு முக்கிய காரணமாகும். “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்” (மத். 9:37,38) என்று கர்த்தர் அங்கலாய்க்கிறார்.

இடைவிடாமல் ஊழியம் செய்வதன்மூலம்தான் ஆவிக்குரிய மேன்மையான அனுபவங்களை நீங்கள் அடைய முடியும்; மேன்மேலும் உயர முடியும். கர்த்தர் ஊழியத்திற்கு இரண்டு, இரண்டுபேராய் அவர்களை அனுப்பியதுடன் அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் தம் வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

கர்த்தர் சொல்லுகிறார், “நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்” (யாத். 20:24). நீங்கள் ஊழியஞ்செய்யப்போகும் இடம் எதுவாயிருந்தாலும் சரி; அது ஆஸ்பத்திரியோ, சிறைச்சாலையோ, தெருவீதியோ, எதுவானாலும் அங்கே கர்த்தர் வந்து உங்களை பெலப்படுத்துவார்.

இயேசு சொன்னார், “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன். நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்” (யோவான் 12:26). பிதாவால் கனம் பண்ணப்படுவது என்பது எத்தனை பாக்கியமானது! வேதத்திலே, உலகப்பிரகாரமான அகாஸ்வேரு இராஜா ஒரு மனுஷனைக் கனம்பண்ண நினைத்தபோது, அவனுக்கு ராஜவஸ்திரம் தரித்து, ராஜமுடியை தலையில் வைத்து, இராஜாவின் குதிரையில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச்செல்லவில்லையா? (எஸ்தர் 6:7,8). பரலோக பிதா உங்களைக் கனம்பண்ணி, “நல்லது, உண்மையும் உத்தமமுமான என் ஊழியக்காரனே” என்று பாராட்டி தட்டிக்கொடுக்கும்போது, உங்கள் ஆனந்தம் எத்தனை அதிகமாக இருக்கும்!

ஊழியக்காரருக்கு கர்த்தரே சுதந்திரமும், பங்குமாய் இருக்கிறார். அவர் தம் ஊழியக்காரரின் சுகத்தை விரும்புகிறார். தம் ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாக்குகிறார் (எபி. 1:7). “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; …இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்” (ஏசாயா 54:17).

தேவபிள்ளைகளே, ஜனங்கள் உண்மையான தெய்வத்தை அறியாமல், இருளில் புழுக்களைப்போல நெளிந்துகொண்டிருக்கிறார்கள். வலதுகைக்கும், இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத கோடிக்கணக்கானபேர் நம் தேசத்தில் உண்டே! ‘நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்’ என்று கிறிஸ்து சொன்னாரே! முதல் கட்டமாக, நீங்கள் வசிக்கும் இடத்தில் மட்டுமாவது சத்தியத்தை அறிவித்துவிட்டீர்களா?

நினைவிற்கு:- “அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்” (வெளி. 22:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.