No products in the cart.
Sep 18 – அக்கினி மயமான குதிரைகள்!
“இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (2 இரா. 6:17).
தம்முடைய ஜனங்களை பாதுகாப்பதானாலும் சரி அல்லது தம்முடைய ஜனங்களுக்காகப் போராடி யுத்தம் செய்வதானாலும் சரி, கர்த்தர் உபயோகிக்கிற வழிகள் ஆச்சரியமானவை, அதிசயமானவை. பாருங்கள்! இங்கே தம்முடைய ஊழியக்காரனைப் பாதுகாக்கும்படி கர்த்தர் தம்முடைய அக்கினிமயமான குதிரைகளையும், இரதங்களையும் அனுப்பிக்கொடுத்தார்.
எலிசா ஒரு சாதாரணமான எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். எலிசாவோடுகூட இருந்தது ஒரேயொரு வேலைக்காரன் மட்டுமே. அந்த தேவ மனுஷன்மேல் பொறாமை கொண்ட சீரியா இராஜா அவனுக்கு விரோதமாகக் குதிரைகளையும், இரதங்களையும், பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; இவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள் (2 இரா. 6:14). யார் எலிசாவுக்காக யுத்தம் செய்வது என்றும், யார் சீரியா இராஜாவின் கைகளில் இருந்து அவரை விடுவிப்பது என்றும் எலிசாவின் வேலைக்காரன் பதறினான். “ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்?” என்றான்.
அதற்கு எலிசா சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘பயப்படாதே, அவர்களோடு இருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம்’ என்றார். ஆம், எலிசாவுக்கு ஆவிக்குரிய கண்கள் இருந்தன. அந்தக் கண்களைக்கொண்டு கர்த்தர் தனக்கு ஆதரவாய் அனுப்பியிருக்கிற அக்கினிமயமான குதிரைகளையும், இரதங்களையும் அவரால் காண முடிந்தது. ஆகவே, அவருடைய உள்ளம் பதறவில்லை.
யோசுவாவின் புத்தகத்தையும், நியாயாதிபதிகளின் புத்தகத்தையும், இராஜாக்களின் புத்தகத்தையும் வேதத்தில் வாசிக்கும்போது கர்த்தர் எவ்விதமாய் தம்முடைய ஜனங்களைப் பாதுகாத்தார் என்பதையும், எப்படி தன் ஜனங்களுக்காக போராடினார் என்பதையும், வழக்காடினார் என்பதையும், யுத்தம் செய்தார் என்பதையும் அறியலாம்.
இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக சிசெரா யுத்தத்திற்கு வந்தபோது, “வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின” (நியா. 5:20). அதுபோல இஸ்ரவேலருக்கு முன்பாக கர்த்தர் கானானியரைத் துரத்தும்படி குளவிகளை அனுப்பினார். ஆயிரக்கணக்கில் குளவிகள் பறந்து வந்து யுத்த வீரர்களைப்போல் நின்றன. கானானியர்களை அவை துரத்தியடித்தன (யாத். 23:28).
இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தியர் துரத்தி வந்தபோது, கர்த்தர் அக்கினி ஸ்தம்பங்களை இரண்டுபேருக்கும் மத்தியிலே வைத்தார். “அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று” (யாத். 14:20).
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களைப் பாதுகாக்கிறவர். அவர் உங்கள்மேல் கண்ணும்கருத்தும் உள்ளவராக இருக்கிறார். குளவிகளை அனுப்பி இஸ்ரவேலைப் பாதுகாத்த கர்த்தர் உங்களையும் கண்டிப்பாக பாதுகாப்பார்.
நினைவிற்கு:- “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” (2 நாளா. 16:9).